2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லும் அரசின் முடிவை பாராட்ட வேண்டும்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 18 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'இந்திய வெளிவிவாகர அமைச்சரிடம் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயார் என்று ஜனாதிபதி உறுதியளித்திருப்பதை கட்சி பேதமின்றி அனைத்து தமிழ் கட்சி தலைவர்களும் பாராட்ட வேண்டும்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
ஒரு வருட காலமாக அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் ஏற்பட்டு வந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரம் 13ஆவது திருத்த சட்டத்திற்கமைய அரசியலமைப்பிலுள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாதென அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்குப்பின் நிலைமை அடியோடு மாறி 13ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் தீர்வுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் கூட்டமைப்பு உட்பட இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கட்சி தலைவர்களும், புலம்பெயர்ந்தவர்களும், புத்திஜீவிகளும், தமிழ் அமைப்புகளும் ஒருமித்த குரலாக ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முடியுமானால் பட்டாசுகளை கொழுத்தி தமது சந்தோஷத்தை தமிழ் மக்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இப்படியான செயற்பாடுகள் மூலம் தான் அரசாங்கம் தனது வாக்குறுதியிலிருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும். இதுவே சாணக்கியமும் விவேகமும் கொண்ட செயற்பாடாகும். அனைத்து தரப்பிலும் அரசாங்கத்தின் இந்த வாக்குறுதிக்கு வரவேற்பு அதிகரிக்கும்பொழுது ஒரு போதும் அரசாங்கம் இவ்வாக்குறுதியிலிருந்து மீளமுடியாமல் கட்டுண்டிருக்கும் நிலைமைக்கு தள்ளப்படும்.

வெறுமனே இத்தருணத்தில் அரசாங்கத்தை நம்ப முடியாது என்று அறிக்கைகள் விடுவதன் மூலம் வாக்குறுதியிலிருந்து அரசாங்கம் தப்பிவிடுவதற்கு சந்தர்ப்பத்தை நாமே வழிவகுப்பதாக அமைந்துவிடும். இத்தருணத்தை பற்றிப்பிடித்து எமது தீர்வை பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடியாக பங்குபற்றுமுகமாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். காலந்தாழ்த்தும் பொழுது அது அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்து விடும். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதன் மூலம் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை வலியுறுத்துவதற்கும்  கூட்டமைப்பினருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .