2025 ஜூன் 25, புதன்கிழமை

எமது ஆதரவு அவசியமானால் அதை ஐதேக பகிரங்கமாக கோரவேண்டும்: மனோ

Super User   / 2011 நவம்பர் 03 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'ஐதேக வெற்றி பெற்றுள்ள ஒரேயொரு மாநகர சபையான கொழும்பு மாநகர சபையில் அரசாங்க கூட்டணிக் கட்சிகளிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சி பாரிய எதிர்ப்பை எதிர்கொள்கின்றது. இந்த இக்கட்டில் இருந்து தங்களது ஆட்சியை  காப்பாற்றிக்கொள்வதற்காக எமது கட்சியின் ஆதரவு அவசியமானால் அது தொடர்பில் ஐதேக எம்மிடம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கைவிடுக்க வேண்டும். அதைவிடுத்து சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் மூலமாகவும், தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் மூலமாகவும் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு நாம் பதிலளிக்க முடியாது. ஆதரவு தேவையென்ற கோரிக்கை ஐதேகவிடமிருந்து எமக்கு அதிகாரப்பூர்வமாக இதுவரையில் கிடைக்கவில்லை' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் முதல்வர் தமக்கு ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரவளிக்கும் என ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக வினவியதற்கு பதிலளித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:
 
"தமிழ் மக்களுக்கு விரோதமான இந்த அரசாங்கத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில், நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியைவிட தெளிவாக இருக்கின்றோம். இதுதொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு பாடம் நடத்த தேவையில்லை.

ஆனால் அரசாங்கத்தை எதிர்க்கின்றோம் என்பதற்காக தமது கட்சிக்கு, நாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிப்போம் என ஐதேக நினைக்கக்கூடாது. எமது உதவி தேவையென்றால் அதை அதிகாரப்பூர்வமாக உங்களது கட்சி தலைமை எம்மிடம் கேட்க வேண்டும். அதுதான் எங்களது கட்சிக்கும், எமக்கு வாக்களித்த தலைநகர தமிழ் மக்களுக்கும் நீங்கள் தரக்கூடிய மரியாதையாகும். இதை இன்று வியாழக்கிழமை காலை என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மாநகரசபை முதல்வரிடம் நான் நேரடியாக தெரிவித்துள்ளளேன்.
 
எமக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இன்று கூட்டணி கிடையாது. எமது கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியை நாம் உடைக்கவில்லை.

தமிழ், முஸ்லிம் கட்சிகளை தம்முடன் கூட்டு சேர்த்துக்கொள்ளக்கூடாது என நினைக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே இருக்கும் ஒரு பேரினவாத குழுதான் அகம்பாவத்துடன் இதை செய்தது. அந்த அகம்பாவத்திற்கு அக்கட்சியில் உள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் தாளம் போடுகிறார்கள். ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் ஐதேக கூட்டணி அமைக்காவிட்டால்தான், தங்களுக்கு ஏதாவது ஒரு சில தேசியப்பட்டியல் மந்திரிப் பதவிகளாவது கிடைக்கும் என இத்தகைய வங்குரோத்து அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். இந்நிலையில் விழுந்தடித்துக்கொண்டு சென்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கு எமக்கு எந்தவித காரணமும் கிடையாது.
 
தேர்தல் நேரத்திலே ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற அனைத்து மட்ட அரசியல்வாதிகளும் எமது கட்சியின் மீது பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். தேர்தல் முடிந்தவுடன் அரசாங்கத்துடன் சென்று இணைந்துக்கொள்ள போகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் அது இன்று நடைபெறவில்லை. எமது கட்சியிலிருந்து கடந்த காலங்களில் சிலர் நிலைத்தடுமாறி அரசாங்கத்திற்கு சென்றிருக்கலாம். ஆனால் அதைவிட மிக அதிகமாக  ஐதேக எம்பிக்கள் தான் அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவியுள்ளார்கள்.

எனவே ஐதேக தமது கட்சியை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். தற்சமயம் எமது ஆதரவு தேவையென்றால் அதிகாரப்பூர்வமாக எம்மிடம் கோரிக்கை விடுத்தால் அதுதொடர்பாக பாசீலிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்."
 


You May Also Like

  Comments - 0

  • Hari Thursday, 03 November 2011 09:57 PM

    சபாஸ் மனோ .............

    Reply : 0       0

    mmrjeseem Thursday, 03 November 2011 10:17 PM

    இப்படி உறுதியுடன் இருந்தால் மிக நல்லது.

    Reply : 0       0

    neethan Thursday, 03 November 2011 10:41 PM

    ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரே? நிபந்தனைகளை விதியாமல்,மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை ஆதரியுங்கள்.

    Reply : 0       0

    Ramesh Friday, 04 November 2011 02:53 AM

    mr. mano don't try to fool people sri lanka, all knows who are you? UNP don't want your cunning support.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .