2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபராக கணேஷராஜாவும் மேல் மாகாண கல்வி பணிப்பாளராக உதயகுமாரும் நியமனம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 11 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரத்மலானை இந்துக் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பில் கடந்த இரண்டு வாரமாக இடம்பெற்றுவந்த இழுபறி, இன்று முடிவுக்கு வந்த நிலையில், அக்கல்லூரியின் அதிபராக களனி வலய பணிப்பாளராக இருந்த கணேஷராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பாடசாலையின் அதிபராக ஏற்கனவே நியமனம் பெற்றிருந்த ஆர்.உதயகுமாருக்கு மேல்மாகாண தமிழ் கல்வி பணிப்பாளர் பதவி வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரபா கணேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இரத்மலானை இந்துக் கல்லூரியில் கடந்த ஆறு மாத காலமாக அதிபர் பதவிக்கு இருந்த வெற்றிடம் மேல் மாகாண கல்வி அமைச்சர் மூலமாக ஆர்.உதயகுமாருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்து வித்தியா விருத்திச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆர்.உதயகுமாரின் மனைவி ஒரு கிறிஸ்தவர் என்ற முறையில் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி எனது அனுமதி பெறப்பட்டது என்ற பெயரில் மேல்மாகாண ஆளுநர் மூலமாக ராஜகிரிய தமிழ் வித்தியாலயத்தின் அதிபரும் எனது நண்பருமாகிய ஷர்மாவுக்கு நியமனத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இது சம்பந்தமாக உடனடியாக நான் அவரது நியமனத்தை ரத்து செய்து மீண்டும் ஆர்.உதயகுமாருக்கு நியமனத்தைப் பெற்றுக்கொடுத்தேன். இருப்பினும் பலரது தலையீடுகள் காரணமாக உதயகுமார் அவரது கடமைகளை பொறுப்பேற்க முடியாமல் இருந்தது.

இதனால் இன்று ஆர்.உதயகுமாருக்கு மேல்மாகாண தமிழ் கல்வி பணிப்பாளர் பதவி வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபராக களனி வலய பணிப்பாளராக இருந்த கணேஷராஜாவை எனது ஆலோசனையின்படி மேல்மாகாண கல்வி அமைச்சு நியமித்துள்ளது.

இதேவேளை, பாடசாலையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த முன்னாள் அதிபரின் துணைவியாரை இடம்மாற்றக் கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும், பழைய மாணவர்களும், உயர்தர வகுப்பு மாணவர்களும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.உதயகுமார் என்பவர் கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் சிறந்த தகைமைகளைக் கொண்ட அதிபர்களில் ஒருவர். இந்து வித்தியா விருத்திச் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இருக்கும் உடன்படிக்கைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

பாடசாலையின் முன்னேற்றத்திற்கு இச்சங்கத்தினருக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் ஆறு மாதமாக அதிபர் தகைமை அற்ற ஒருவரை அதிபராக கடமையாற்ற அனுமதித்ததேன் என்பதற்கு அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். இந்து மதத்தின் மூலமாக தமிழ்க் கல்வி பாரிய வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதேநேரம் கல்வி வளர்ச்சிக்கு இந்து மதத்தின் பெயரால் தடை செய்பவர்களுக்கு இடங்கொடுக்க முடியாது.

தனிப்பட்டவர்களின் சுய கௌரவத்திற்காகவும், இலாபங்களுக்காகவும் தமிழ்க் கல்வித் துறைக்கு பாதிப்பு ஏற்படுத்த ஒரு போதும் நான் பதவியிலிருக்கும் வரை இடமளிக்க மாட்டேன்.

இன்று இப்பிரச்சினை முடிவுற்றாலும் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு உடனடி தீர்வை காணத் தவறியதற்கான பொறுப்பையும் ஆர்.உதயகுமாருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமரியாதைக்கும் மேல்மாகாண முதலமைச்சரும், மேல்மாகாண ஆளுநரும் பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபா கணேசன் எம்.பி. அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Solavarman Thursday, 12 January 2012 02:01 AM

    பாடசாலையில் குடும்ப ஆட்சி கொண்டு வரப் படுவதையோ அன்றி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மன்மதராஜன் குடும்பம் பதவியை வைத்திருப்பதையோ அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில், அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும். கொழும்பிலே, குறிப்பாக சிங்கள மக்கள் செறிந்து வாழும் ரத்மலான , சொய்சாபுர பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி மற்றும் அப் பகுதிகளில் தமிழ், தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கவும் பேணிப் பதுகக்கவுமே இந்தப் பாடசாலை பல சிரமங்களின் மத்தியில் கட்டப்பட்டது. அகவே, அதிபர் நியமனமானது இந்த நோக்கத்தினை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

    ஆனால், புதிய அதிபராக நியமிக்கப் பட்ட உதயகுமாரும் , மன்மதராஜனைப் போல சிங்கள அரசியல் செல்வாக்கு மிக்கவர். அத்தடன், Pentecostal என்ற கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த ஒரு சிங்கள பெண்ணை திருமணம் செய்து அவரும் அந்த மதத்தை தழுவி உள்ளார். இது, இந்தப் பாடசாலையின் அதிபர் பதவிக்கு எந்தளவு பொருத்தமானவர் என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது. ஆகவே, இந்தப் பாடசாலை உருவாக்கப் பட்ட நோக்கத்தை முன் நகர்த்தி செல்லகூடிய ஒரு தகுதியான அதிபரை புதிய விண்ணப்பம் மூலம் தெரிவு செய்வதே பொருத்தமானது. நியமனங்கள் கூடாது.

    இந்த, பாடசாலை இழுபறி விடயத்தில் சில அரசியல் நாடகங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன. இந்த இரண்டு எதிர் முகாம்களின் ஒரு தலைவராக ஜனாதிபதிக்கு நெருக்கமான நீலகண்டனும் மறு அணிக்கு பிரபா கணேசனும் செயற்படுகின்றனர். இந்த விடயத்தில், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளரும் மனோ கணேசனின் நம்பிகைகுரியவருமான குமர குருபரன், பிரபா கணேசனுடன் தோளோடு தோள் நின்று செயற்படுகிறார். மனோ கணேசன் மறைந்து நின்று செயற்கிறாரா?

    Reply : 0       0

    முன்னாள் மாணவன் Thursday, 12 January 2012 03:24 AM

    இந்த செய்தியை ஆரம்பத்திலிருந்து பக்கசார்பின்றி நடுநிலை தவறாது, ஊடக தர்மத்துக்கு அமைவாக வழங்குவதில் அக்கறை செலுத்திய தமிழ்மிரருக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    Reply : 0       0

    jeyarajah Thursday, 12 January 2012 12:09 PM

    ஜனாதிபதி அவர்கள் ராமநாதன் மகளிர் கல்லுரி அதிபர் திருமதி கோதை நகுலராஜாவை இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அதிபராக நியமித்து இரண்டு பாடசாலைகளின் பிரச்சனைகளையும் ஒரே கல்லில் வீழ்த்தியிருக்கலாம்.

    Reply : 0       0

    balachandran Thursday, 12 January 2012 06:16 PM

    ஏன் இவர்கள் இப்படி மத வெறி பிடித்து அலைகிறார்கள். இதனாலேதான் தமிழர்கள் இன்றுவரை வேதனையை அனுபவிக்கிறார்கள். இப்படியான அரசியல் தலைவர்கள் எமக்கு வேண்டாம்.

    Reply : 0       0

    ummpa Friday, 13 January 2012 06:50 AM

    இப்ப புரியுதா ! கிறிஸ்தவர்கள் தமிழ் பாடசாலை அதிபர் ஆவது உங்களால் ஜீரணிக்க முடியவில்லை இப்படி ஆழ திட்டமிட்டு இந்துதான் இப்பாடசாலைக்கு அதிபர் என்று நீங்கள் நினைக்கும்போது வடக்கு கிழக்கு ஒன்றுபடும் என்பது கேள்விக்குறிதான் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .