2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இந்தியாவுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதியை நிறைவேற்ற அரச தரப்பினர் ஒத்துழைப்பார்களா என்பது சந்தேகம்: ஜயல

Menaka Mookandi   / 2012 ஜனவரி 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் இணக்கம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. எனினும் அரச தரப்பினர் இதற்கு ஒத்துழைப்பார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தெசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த கட்டத்தில் இவ்வாறான உறுதிமொழியை இந்தியாவுக்கு ஜனாதிபதி வழங்கியிருந்த போதிலும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்சமயம் வழங்கியுள்ள உறுதிமொழி ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மக்களையும், இந்தியாவையும் ஏமாற்றும் செயற்பாடா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் டாக்டர் ஜயலத் ஜயவர்தன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லத் தயார் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக கூறியிருந்தார்.

இதேபோன்றே யுத்தம் நிறைவடைந்த அதாவது 19ஆம் திகதி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகான 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்ல இணக்கம் என்று இந்தியாவுக்கு இலங்கை அறிவித்திருந்தாக அறியமுடிந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய இந்த உறுதிமொழியை அடுத்தே யுத்தத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியது என்பது இரகசியமல்ல.

இந்த நிலையில், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அதற்கு அப்பாற்சென்று அரசியல் தீர்வு காண இணக்கத்தை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி. எனினும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளாக ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் உறுப்பினர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்களா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அரசின் இவ்வறிவித்தலானது இலங்கைத் தமிழ் மக்களை மட்டுமன்றி இந்தியாவை ஏமாற்றும் செயற்பாடாகவும் மாறலாம். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது.

எனவே 13ஆவது திருத்ததின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை வழங்க அரசுக்கு இதுவே சிறந்த தருணம்' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .