2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மேல்மாகாணத்தில் ஜ.ம.கா.தனித்து களமிறங்கும்: பிரபா

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி மாதத்தில் கலைக்கப்பட்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபை தேர்தலில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவதற்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

 ஜனநாயக மக்கள் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வெற்றிடமாக இருந்த உப தலைவர் பதவிக்கு அந்தோணிமுத்து குணநாயகம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். மேலும் சில உறுப்பினர்கள் செயற்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதே சமயம் கடந்த மத்திய மாகாணசபை தேர்தலிலே உருவாக்கப்பட்ட மலையக தேசிய முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் 24,000 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டது. இந்த கூட்டணியின் மூலமாக மலையக மக்கள் முன்னணியுடனான எமது உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 மேல் மாகாணத்திலும் கூட மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இருப்பினும் இம்முறை மூன்று மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவத்தை நிச்சயமாக பெற்றுக் கொள்வோம். கடந்த மூன்று நாடாளுமன்ற  காலப்பகுதியில் நாம் செய்து வரும் மக்கள் சேவைக்கு மக்கள் நிச்சயம் அங்கீகாரம் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணசபையிலுள்ள தமிழ் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் சேர்த்தே நாம் செய்து வருகின்றோம். இதனடிப்படையில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். அது மட்டுமின்றி களுத்துறை மாவட்டத்தில் எமது தொழிற்சங்கமே 65வீதம் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள தொழிற்சங்கமாக திகழ்கின்றது. இந்த தொழிற்சங்க வாக்குகளே ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள 18,000 தமிழ் வாக்காளர்களின் 60வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டாலே ஒரு ஆசனத்தை எம்மால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். கம்பஹா மாவட்டத்திலும் 10,000 வாக்குகளை நாம் பெற்றுக் கொள்வோமேயானால் இலகுவாக ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள பிரபல்யமானவர்கள் பலர் இன்று எம்முடன் இணைந்து போட்டியிட தயாராகி வருகின்றனர். அதே போல் கொழும்பு மாவட்டத்தில் 49 வேட்பாளர்களில் அரைவாசிக்கும் அதிகமான வேட்பாளர்களை நாம் ஏற்கனவே தெரிவு செய்துள்ளோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்மூன்று மாவட்டங்களிலும் தனித்து போட்டியிடுவார்களேயாயின் அவர்களுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நாம் தயாராக உள்ளோதோடு இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடாத்த நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .