2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் கம்பஹா மாவட்ட தமிழர் ஒன்றுகூடல்

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 'எதிர்வரும் மேல் மாகாணசபை தேர்தலில் நீர்கொழும்பு  உட்பட கம்பஹா மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உறுதிப்படுத்த போகின்றோம்' என்ற தலைப்பில் ஜனநாயக மக்கள் முன்னணி கம்பஹா மாவட்ட செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நீர்கொழும்பு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கலந்து கொண்டு மக்களின் கருத்துரைகளை கேட்டறிந்து கொள்வார் எனவும், கௌரவ அதிதியாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கலந்துகொள்வார் எனவும் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'இந்த ஒன்றுகூடல் நிகழ்வு, நீர்கொழும்பில் 30ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நீர்கொழும்பு, எதுகல, பொருதொட்ட வீதியில் அமைந்துள்ள செரிலேன்ட் மண்டபத்தில் நடைபெறும். 

இந்நிகழ்வில் முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் இணைய உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்றைய புதிய சமாதான காலகட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்மை நாம் ஜனநாயக அரசியல்ரீதியாக பலப்படுத்தி கொள்ளவேண்டும் என்ற எமது தலைவரின் கொள்கைக்கு இணங்க இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் நாம் எந்த அடிப்படையில் போட்டியிட்டு எமது இனத்தின் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையிட்டு நாம் சிந்தித்து முடிவு செய்யவேண்டும்.

இந்த கம்பஹா மாவட்ட தமிழர் ஒன்றுகூடல் நிகழ்வு வரிசையில் முதலாம் நிகழ்வு கடந்த மாதம் 20ம் திகதி வத்தளையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இரண்டாம் நிகழ்வாக நீர்கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் நேரத்தை ஒதுக்கி கலந்துகொண்டு, தலைவர் மனோ கணேசனுடன் உங்கள் கருத்துகளை மனந்திறந்து பகிர்ந்து கொள்ளும்படி நீர்கொழும்பு உட்பட கம்பஹா மாவட்டத்தில் வாழும் சமூக சிந்தனை கொண்ட தமிழர்களுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயற்குழுவின் சார்பாக முன்னணியின் பிரதம மாவட்ட செயலாளர் ஜெரோம் சி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .