2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கோவில் உடைப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன: மனோ

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து கோவில் உடைப்புகளை அடுத்து, கண்டனம் தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட வணக்கஸ்தலத்துக்கு சென்று வருவது, போலிஸ் அதிகாரிகளிடம் புகார் செய்வது ஆகிய நடவடிக்கைகளைவிட, இந்த சட்டவிரோத அநியாயங்கள் தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் விதத்தில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின், தொழிற்சங்கங்களின் தமிழ் இந்து அரசியல்வாதிகள் காத்திரமாக பணியாற்ற முன்வர வேண்டும்' என்று ஜனாநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

'ஒரு சம்பவம், இரண்டு சம்பவங்கள் என்றால் கண்டனம், பொலிஸ் புகார் என்று விட்டுவிடலாம். ஆனால், இன்று இது ஒரு தொடர்கதையாகியுள்ளது. எனவே காத்திரமான நடவடிக்கை காலத்தின் கட்டாயம். இதை செய்ய முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் இந்து அரசியல்வாதிகள் எந்தவித அதிகாரமுமற்ற கண்காட்சி பொம்மைகள் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு உலகத்துடன் நாம் செல்லலாம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹாலிஎல, காளியம்மன் சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

'தொடர்ச்சியாக நடைபெறும் இந்து ஆலய சிலையுடைப்பு, கொள்ளையடிப்பு சம்பவங்கள் இந்து மக்களின் இதயங்களை உடைத்து சொல்லொணா துயரை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்த சட்டவிரோத அநியாயங்கள் தொடர்பாக அரசில் உள்ள அனைத்து தமிழ் இந்து அரசியல்வாதிகளும் ஒரு தூதுகுழுவாக சென்று, தமது ஆளும் கூட்டணி தலைவரும், நாட்டின் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக முறையிட வேண்டும்.

அரசாங்க தலைவரின் கண்டிப்பான உத்தரவு பொலிஸ் துறைக்கு வழங்கப்படும் பட்சத்தில் மாத்திரமே இந்த நாசகார நடவடிக்கைகள் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதை  அரசில் உள்ள அனைத்து தமிழ் இந்து அரசியல்வாதிகளும்  புரிந்து கொள்ளவேண்டும். எனவே வெறுமனே கண்டனம் தெரிவிப்பதையும்,  பொலிஸ் அதிகாரிகளிடம் புகார் செய்வதையும் விடுத்து நாட்டின் தலைவரிடம் இதுபற்றி உரையாடி இதை நிறுத்த வேண்டும்.

உண்மையில் இன்று, இந்து ஆலயங்களை அடித்து உடைத்து துவம்சம் செய்துவிட்டு தப்பி விடலாம் என்று பெரும்பான்மை இன, மத தீவிரவாதிகளுக்கு தைரியம் வந்து விட்டது.  இந்து ஆலயங்களில் கைவைத்துவிட்டு தப்பி விடலாம் என உள்ளூhர் திருடனுக்கும் துணிச்சல் வந்துவிட்டது.

இதற்கு காரணம் இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற மற்றும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து நிற்கின்ற பெரும்பான்மை இன-மதவாத தீவிரவாத சக்திகளாகும். இதே அரசில் இருப்பதால், இதுபற்றி தமது அரசு தலைவரிடம் ஆளுமையுடன் எடுத்து கூறி தமது ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இவர்களுக்கு இருக்கின்றது.

இந்த அரசுக்கு தேவையான பெரும்பான்மை பலம் இருக்கலாம். ஆனால் நாங்கள் ஒரு சிங்கள பௌத்த அரசு அல்ல் இந்த அரசாங்கத்தில் தமிழர்களும், இந்துக்களும் இருக்கிறார்கள் என்று உலகத்துக்கு காட்டும் தேவையும் இந்த அரசுக்கு இருக்கிறது. இதற்குதான்  அரசில் உள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் பயன்படுகிறார்கள். இதை ஒரு சாதகமாக பயன்படுத்தி தனது சொந்த வேலைகளை செய்துகொள்வதை விடுத்து, அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் வாக்களித்த தமிழ் மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும். மக்களின் உணர்வு பிரச்சினையான மத விவகாரத்திலாவது நியாயமாக நடக்கும்படி தமது அரசுக்கு ஒட்டு மொத்தமாக அரசில் அங்கம் வகிக்கும் எல்லா தமிழ் கட்சிகளும் நெருக்கடி கொடுத்தால் இந்த அரசு யோசிக்கும் நிலைமை ஏற்படும்' என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .