2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காணிகளில் இராணுவம்-அகதிகளாக மக்கள்: ஐ.நாவிடம் சி.வி தெரிவிப்பு

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடமாகாணத்தில் அகதி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை' என, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயப் பணிப்பாளர் டெய்ஜி டெல், யாழ். மாவட்டததுக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது செயலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை (07) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, முதலமைச்சர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

'அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயப் பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர், அகதிகள் குறித்து ஆராய்வதற்கு இங்கு வருகை தந்திருந்தனர். தெல்லிப்பளை பிரதேசத்தில், அகதிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறான நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென, இதன்போது ஆராய்ந்தனர்.

இது தொடர்பில் என்னிடம் கேட்டபோது, யாழ்; மாவட்டத்தில் தொடர்ந்தும் மக்களின் காணிகளில் இராணுவம் இருப்பதனால், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் வரக்கூடும். இராணுவ பிரசன்னத்தினாலும் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் அகதிகளாக உள்ள நிலை தொடர்கின்றது.

வடமாகாணத்தில் இராணுவம், மக்களின் காணிகளை விட்டுச் சென்றால் மாத்திரமே, மக்கள் தமது காணிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினேன். மேலும், இந்தியாவில் இருந்தும் மக்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டு மக்கள் எமது நாட்டுக்கு  திரும்பி வருவதை வரவேற்கின்றோம்.

ஆனால், அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்;. அவ்வாறு நாட்டுக்குத் திரும்பி வரும்போது, அவர்களின் காணிகள் வேற்று இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலைமை காணப்படுகிறது. இதனால், அவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றார்கள்.

குடியமர்த்தியவர்களை வெளியேற்றாமல், அம்மக்களுக்கு மாற்றுக்காணி தருவதாக கூறிவருகின்றார்கள். இவை அனைத்தும், அவர்களுக்கு பல விதமான பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றது எனத் தெரிவித்தேன்.

மேலும், நாட்டில் அகதிகள் இல்லாத நிலை ஏற்படுகின்றதா என்பது பற்றி, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அவதானிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இந்தியாவில் இருந்து வருகை தரும் இலங்கை அகதிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்க, ஐக்கிய நாடுகள் அலுவலகமும் முன்வர வேண்டுமென்று கோரிக்கை முன்வைத்துள்ளேன். அவற்றினைப் பரிசீலித்து வருகின்றதாக, அவர்கள் தெரிவித்தனர்' என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .