2025 மே 21, புதன்கிழமை

‘தமிழ் மக்களே கரையோரங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

எமது தாயகப் பரப்பின் எல்லைக்குள் மகாவலி ஊடுருவ முற்படும்போது, அந்த இடத்திலிருந்து மகாவலி கரையோரங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் எமது தமிழ் மக்களே அன்றி வேறொரு இனமாக இருக்க முடியாது என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் இதுதான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. 'நைல் நதி' எங்கெல்லாம் பாய்கின்றதோ அங்கெல்லாம் ஸ்ரேலியக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரேலிய சிந்தனை வெறியர்கள் எவ்வாறு திட்டங்களைத் தீட்டினார்களோ, அதுபோலதான் அன்று மகாவலி அபிவிருத்தி திட்டம் இங்கு ஆரம்பிக்கப்பட்டது.

“இதன்போது மகாவலி எங்கெல்லாம் பாய்கின்றதோ, அங்கெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என எழுதப்படாத சட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.

“ஆனால், இன்று மகாவலி அபிவிருத்தி திட்டமானது வடக்கு நோக்கி பாய்ந்துவரப் போகின்றது. எங்களைப் பொறுத்தளவில் நாம் மகாவலி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம். அதாவது நீரை மட்டும். 

“ஏனென்றால் அந்த நீர் வடக்கு – கிழக்குத் தாயக மக்களுக்கு நிச்சயமாகப் பயன்பட வேண்டும். எமது பகுதிகளில் காலநிலை காரணமாக நிலத்தடி நீரின் தன்மை குறைந்து வருகின்றது. இதனால் எமது தாயகப் பிரதேசங்கள் பாலைவனமாகும் அபாயங்களை எதிர்கொண்டிருக்கின்றது.

“அந்தவகையில் எமது வடக்கு – கிழக்கு வாழ் மக்கள் அந்த நீரின் பயன்களை அனுபவிக்கவேண்டும் என்பது எமது விருப்பம். ஆனால் மகாவலித்  திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடத்தப்படுவதை நாம் வெறுக்கின்றோம். அதனைக் கண்டிக்கின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .