2025 மே 17, சனிக்கிழமை

பிரதமரின் கேள்விக்கு திணறிய அதிகாரிகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில், வனஜீவராசிகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 5,765 ஹெக்டயர் நிலப்பகுதிக்கான வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உத்தரவை 6 மாதங்களாக மேற்படி திணைக்களம் நடைமுறைப்படுத்தாமல் இருந்துள்ளதுடன், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் குறித்த திணைக்கள அதிகாரி திணறினார்.

நுகர்கோவில் கிழக்கு பகுதியில் சுமார் 1237 ஹெக்ரயர் நிலப்பகுதியையும் சுண்டிக்குளம் பகுதியில் 4528 ஹெக்டயர் நிலப்பகுதியையும் வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.

இந்த விடயம் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்  மந்திரனின் முயற்சியால் கவனத்துக்கு எடுக்கப்பட்டது.

குறித்த நிலப்பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள் என சுட்டிக்காட்டியதுடன், மக்களுடைய விவசாய நிலங்கள் மீன்பிடிக்கும் இடங்கள் பாடசாலைகள் ஆலயங்கள், குடியிருப்புகள் இவற்றுக்குள் அடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியை கையகப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுமாறு பிரதமர் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதே விடயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலும் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், “எதற்காக அந்த வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்படவில்லை?” என, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய திணைக்கள அதிகாரி, மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் உள்ளிட்ட சில திணைக்களங்களின் அனுமதி வேண்டும் என கூறினார்.

ஆனால் அவ்வாறன அனுமதி வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்கே தேவை. அதனை மீள பெறுவதற்கு தேவையில்லை என பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதுடன், உடனடியாக அந்த வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட வேண்டும் என, பிரதமர் இரண்டாவது தடவையாக குறித்த திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் விடயம் பேசப்படுகையில் கோபமடைந்த வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடமராட்சி களப்பு குடிநீர் திட்ட விடயத்திலும் இந்த திணைக்களம் மிகமோசமாக நடந்து கொண்டதாகவும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனுப்பப்பட்ட செயற்றிட்டம் தொடர்பான விடயங்களை சிங்கள மொழியில் தருமாறு தன்னிடம் கேட்டதாகவும் கூறியதுடன், வடமாகாணத்தில் எதற்காக சிங்கள மொழியில் தரவேண்டும் எனவும் கேட்டுகடுமையான கோபமடைந்த நிலையில் பிரதமர் குறுக்கிட்டு அவரை ஆற்றுப்படுத்தினார்.

இதற்கிடையில் வனஜீவராசிகள் திணைக்களத்தில் தமிழ் தெரிந்த அல்லது தமிழ்பேசும் அதிகாரிகள் இல்லையெனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், தமிழ் அதிகாரிகள் அல்லது தமிழ்பேச தெரிந்த அதிகாரிகள் தேவை என்பதை வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .