Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 28 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரியளவு சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடுவதாக வடமாகாண சபையில் சுட்டிக்காட்டிய சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதனைத் தடுத்து நிறுத்தவும் தமிழர் எல்லைப் பகுதிகளில் தமிழர்களின் இருப்பை நிலை நாட்டவும் எல்லோரும் அணி திரளவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்கமைய, மேற்படி மாயபுர சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் எல்லைப் பகுதிகளின் இருப்பை நிலை நாட்டும் வகையில் மாகாண சபையில் விசேட அமர்வொன்றை நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 119 ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நேற்று (27) நடைபெற்றது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மாகாவலி அதிகாரசபையானது, பாரிய சிங்களக் குடியேற்றத்துக்கு முயல்கின்றது. இது விடயமாக பல தடவைகள் சபையிலும் சுட்டிக்காட்டி இருந்தாலும் தற்போது இந்தவிடயம் விஸ்வரூபம் எடுத்து இம் முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் கவனயீர்ப்பு பிரேரணையொன்றை சபையில் கொண்டு வந்தார்.
இப் பிரேரணையைக் கொண்டு வந்து ரவிகரன் உரையாற்றுகையில்,
மகாவலி அதிகாரசபை, தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. இதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுகேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலிஓயா என அழைக்கப்படும் தனிச் சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது. இதனால் பெரும் பாதிப்பு உண்டாகவுள்ளது.
இதனை தொடர்ந்து மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயம் ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து உறுப்பினர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இந்தவிடயம் தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருகின்றார். ஒரு தடவை இது தொடர்பாக பேசும் போது மாகாண சபை உறுப்பினர்களை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருமாறு அழைத்திருந்தார். ஆனாலும் மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் செல்லவில்லை. இந்நிலையில் இந்த மாயபுர என்ற பெயரில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு விசேட அமர்வு ஒன்றை நடத்த வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தவிடயம் தொடர்பாக சுட்டிக்காட்டி அவர்களும் மத்தியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கமைய விசேட அமர்வு ஒன்றை நடாத்துவதாக அவைத் தலைவர் சிவஞானம் அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .