2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வட மாகாணத்தில் 353,272பேர் மீள்குடியேற்றம்: ஆளுநர்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 11 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத், எஸ்.ஜெகநாதன்

'வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த மக்களில் இதுவரையிலும் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 272பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று திங்கட்கிழமை (11) தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக மெச்சத்தக்க அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் தனது கன்னியுரையினை நிகழ்த்தியபோது ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'வட மாகாணத்திற்காக 2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியானது இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட அதிகமானது.

வட மாகாணம் உற்பத்தி மட்டமானது கடந்த நான்கு ஆண்டுகளில் 25.9 வீத வளர்ச்சியினைக் காட்டியுள்ளதாக மத்திய வங்கி ஆண்டறிக்கை கூறுகின்றது. இதன் மூலம் வட மாகாணத்தில் வாழும் ஒருவரின் தலா வருமானம் 2013ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த மக்களில் இதுவரையிலும் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 272பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், மீளக் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்களவு உட்கட்டுமான மற்றும் அடிப்படை வசதிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வட மாகாணத்திலுள்ள மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள் இனங்காணப்பட்டு மத்திய அரசினால் மாவட்ட செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டு விடயங்கள் என்பவற்றிற்கு அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாக இருப்பதுடன், இதற்கு குறித்த தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் மாகாணத்தின் முதலமைச்சர் ஆகியோர் இணைத் தலைமை வகிப்பார்கள்.

வட மாகாணத்தில் கடந்த நான்கு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட துறைசார் அபிவிருத்திகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு,
 
விவசாயம்
வட மாகாணத்தின் முக்கிய உற்பத்தியாகவும் மக்களின் வாழ்வாதார துறையாகவும் விவசாயம் காணப்படுகின்றது. ஏறத்தாழ 60 வீதமான மக்கள் தமது முக்கிய பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்திற்கான செயற்பாடாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

வடமாகாணத்தின் விவசாயத்துறை அபிவிருத்தியடைந்ததன் விளைவாக 2013ஆம் ஆண்டில் நெல் அறுவடையானது 2 இலட்சத்து 33 ஆயிரத்து 317 மெற்றிக் தொன்னாக உயர்வடைந்திருந்ததுடன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கக் கூடியதாகவும் இருந்தது.

தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் நெல் உற்பத்தியினை அதிகரித்தல், அறுவடைக்கு முந்திய பிந்திய இழப்புக்களை குறைத்தல் உள்ளிட்ட பற்றி அதிகம் கவனம் செலத்தப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு இயந்திரங்கள், உபகரணங்கள், பசளைகள் தரமான விதைகள் என்பன வழங்கப்பட்டுள்ளதுடன், புதிய மாகாண சபையின் ஒத்துழைப்பு விவசாயத்துறைக்கு ஏற்படுத்தப்பட்டு விவசாயத்துறை வடமாகாணத்தில் வளர்ச்சியடைய வேண்டும்.

மீன்பிடி
வட மாகாணத்தின் இன்னுமொரு வாழ்வாதாரமாக மீன்பிடியுள்ளதுடன் 2013ஆம் ஆண்டில் வட மாகாணத்தில் நன்னீர் மீன்பிடியும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நீரியல் அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களில் நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி செய்யப்பட்டன.

2012ஆம் ஆண்டு வடமாகாணத்தின் மீன்பிடி 59 ஆயிரத்து 340 மெற்றிக்தொன்னாக அதிகரித்துள்ளது. வட மாகாணத்தின் மீன்பிடியில் தற்போது கலங்கள், ரோலர் படகுகள், வெளி இணைப்பு இயந்திர மீன்பிடிப் படகுகள் என்பன பயன்படுத்தப்பட்டு மீன்பிடித்தல் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனம்
வட மாகாண நீர்ப்பாசன துறையின் கீழ் 45 நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும் 9 பாரிய நீர்ப்பாசன திட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றதுடன் சிறு நீர்ப்பாசனத்தின் கீழ் 2066 குளங்களும் உள்ளடக்கப்படுகின்றன. 2013ஆம் ஆண்டில் ஏறத்தாழ  70 ஆயிரத்து 181 ஏக்கர் நிலத்தில் நீர்ப்பாசன வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு பொருத்தமான நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல், வடிகாலமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு அணைகளை மேம்படுத்தல், உற்பத்தித்திறன் மேம்பாடு, பௌதீக வளங்கள், நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்பன செயற்படுத்தப்பட வேண்டும்.

கால்நடை
கால்நடை உற்பத்தியில் முக்கியமான பால் உற்பத்தி 2012ஆம் ஆண்டில் 77 ஆயிரம் லீற்றராகவிருந்து 2013ஆம் ஆண்டு 90 ஆயிரம் லீற்றராக உயர்வடைந்துள்ளது. அத்துடன் கோழி இறைச்சி உற்பத்தி 75 சதவீதம் 2013ஆம் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் வட மாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும்.

கல்வி
வட மாகாணத்தில் இயங்குகின்ற 983 பாடசாலைகளில் தேசிய நிகழ்ச்சித் திட்டமான 'ஆயிரம் பாடசாலைகள்' மற்றும் '5 ஆயிரம் ஊட்டப் பாடசாலைகள்' என்ற திட்டங்கள் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 90 பாடசாலைகளில் மஹிந்தோய திட்டத்தின் கீழ் ஆய்வுகூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தின் எழுத்தறிவு 88 வீதமாகவும் பாடசாலை செல்வோர் வீதம் 73 வீதமாக உயர்வடைந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 1764 ஆசிரியர்கள் வடமாகாணத்தில் புதிதாக சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், கல்வித் துறைக்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுகாதாரம்
வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 6 ஆதார வைத்தியசாலைகள், 45 பிரதேச சைத்தியசாலைகள் மற்றுமு; 52 கிராமிய சுகாதார நிலையங்கள் என்பன வடக்கு மாகாண மக்களின் சுகாதார சேவையின் பொருட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

மாகாண சுகாதார துறையினரால் 2014ஆம் ஆண்டில் சுகாதார முறைமையை முன்னேற்றுதல், தாய் சேய் நலன்களை மேம்படுத்தல், தொற்றுறும் மற்றுமு; தொற்றா நோய்களை கட்டுப்படுத்தலும் தடுத்தலும், முழுமையான நோய் பராமரிப்பு சேவைகளை வழங்குதல் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சேவைகளை சீரமைத்தல், போசாக்கு மற்றும் நலிவுற்ற சமூகத்தின் சுகாதார மேம்பாடு ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலா
சுற்றுலாவுக்கான இடங்கள், சிறுவர் பூங்காவுடன் கூடிய பொழுது போக்கு இடங்களின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை தகவல் வெளியீடுகள் என்பன முக்கியமான செயற்பாடுகளாக 2013ஆம் மேற்கொள்ளப்பட்டன.

இனிவருங்காலங்களில் பல்வகைத் தன்மை வாய்ந்த கவர்ச்சி மிக்க இடங்களை உருவாக்குதல், சுற்றுலா துறையை நோக்கிய சந்தைப்படுத்தலுடன் கூடிய உற்பத்திகளை உருவாக்குதல், சுற்றுலாத்துறை மேம்பாட்டினூடாக உள்ளுர் சமூகத்தின் வருமானத்தினை உயர்த்துதல் என்பன கவனத்திலெடுக்கப்படவேண்டும்.

வீதிகள்
வடமாகாணம் 1960 கிலோ மீற்றர் வீதிகளையும், 7600 கிலோ மீற்றர் கிராமிய வீதிகளையும் கொண்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 350 கிலோ மீற்றர் வீதிகளும், 842 கிலோ மீற்றர் மாகாண வீதிகளும், 1282 கிலோ மீற்றர் கிராமிய வீதிகளும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .