2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் சிறு குற்றம் புரிந்த 151 பேர் கைது

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா, நவரட்ணராசா

யாழில் சிறுகுற்றங்கள் புரிந்த 151 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்;ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 30 பேர், அடித்து காயம் ஏற்படுத்திய 17 பேர், சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 14 பேர், மதுபோதையில் வாகனம் செலுத்திய 05 பேர், திருட்டுக் குற்றச்சாட்டில் 02 பேர், வீதி விபத்துக்கு காரணமான 04 பேர், மதுபோதையில் பிரச்சினைகளை ஏற்படுத்திய 07 பேர், சட்டவிரோத மது விற்பனை செய்த 08 பேர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 08 பேர், காசோலை மூலம் பணமோசடி செய்த 02, சூழல் மாசடைதல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர், தனது மனைவி, பிள்ளைகளை கவனிக்க தவறிய ஒருவர், பாரிய குற்றச் செயலில் ஈடுபட்ட 04 பேர், ஏனைய குற்றங்களுக்காக 48 பேர் உள்ளடங்கலாக மொத்தம் 151 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 
இதற்கமைவாக, வல்வெட்டித்துறை பகுதியில்  கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி சவ்பாரி மோட்டார் சைக்கிளினை தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் தொண்டமனாறு கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,  கோப்பாய் நாவலடி பகுதியில் வீடு உடைத்து 60 ஆயிரம் பெறுமதியான உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக கடந்த 5 ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாபார நோக்கத்திற்காக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலை வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாட்டின் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நபர் மேற்படி மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையை மேற்கொண்ட நீதிபதி காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் அக்காசோலைக்குரிய பணத்தினை செலுத்துவதாக தெரிவித்த நிலையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .