2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'மீளக்குடியமர்ந்த மக்களது நலன்களில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா மிகுந்த அக்கறையுடன் செயற்படுகின்றார்'

Kogilavani   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலிவடக்கு பகுதி மக்களை மீளக்குடியமர்த்தியதுடன் மீளக்குடியமர்ந்த மக்களது நலன்களிலும் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பிலும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் என யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

வசந்தபுரம் இளவாலையில் நேற்று புதன்கிழமை இட்மபெற்ற அடிப்படைக் கட்டுமானங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இப்பகுதியை படைத்தரப்பினரிடமிருந்து விடுவிப்பது மற்றும் மக்களை மீளக்குடியேற்றுவது போன்ற நடவடிக்கைகளில் அமைச்சர் மிகுந்த கவனம் செலுத்தியது மட்டுமல்லாது துறைசார்ந்தவர்களிடனும் கலந்துரையாடியிருந்தார்.

அதன் பயனாகவே இன்று இப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீளக்குடியமர்ந்த மக்களது நலன்கள் தொடர்பான விடயங்களிலும், வாழ்வாதார மேம்பாடு, அபிவிருத்தி தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

யாழ்.மாவட்டத்திற்கு இன்னும் 60 ஆயிரத்து 500 வீடுகள் தேவையாகவுள்ள நிலையில் 27 ஆயிரம் வீடுகள் உலக வங்கி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, யு.என்.டி.பி உள்ளிட்ட நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் எமது மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தி வரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபகஷவுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.

இங்கு நோர்வே தூதரக முதன்மைச் செயலாளர் கருத்துத் தெரவிக்கும் போது,

90 மில்லியன் ரூபா செலவில் வசந்தபுரம் உள்ளிட்ட யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் வீட்டுத் திட்டங்களை நோர்வே அரசு அமைத்துள்ளது.

இப்பகுதியினது தற்போதைய அபிவிருத்தி கண்டு நாம் மிகழ்ச்சி கொள்ளும் அதேவேளை இம்மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் உதவி வருகின்றோம் எனவும் இறுதி யுத்தத்திற்கு பின்னரான இக்காலப் பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நோர்வே அரசு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

மீளக்குடியேறியுள்ள மக்களில் பலருக்கு காணி உரிமங்கள் இல்லாதுள்ளதாகவும் விரைவில் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வின் போது, நோர்வே அரசின் நிதியுதவியுடன் யு.என்.டி.பி நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், அரைக்கும் ஆலை மற்றும் வீடுகளுக்கான உரிமைச் சான்றிதழ்களை நோர்வே தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் மார்ட்டி ரோக்கினோஸ் வழங்கி வைத்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு கட்டிடத் தொகுதிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அதிதிகள் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

அத்துடன் வசந்தபுரம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை திறந்து வைத்த அதிதிகள் வியாபார நடவடிக்கைகளையும் சம்பிரதாயப்பூர்வமாகத் ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வில் யு.என்.டி.பி.யின் இலங்கைக்கான பிரதி திட்டப் பணிப்பாளர் ரசீனா மில்கமி, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரும் தெல்லிப்பளை பதில் பிரதேச செயலாளருமான முரளீதரன் ஈ.பி.டி.பி.யின் வலிவடக்கு பிரதேச இணைப்பாளரும் வலி வடக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பு உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி கட்டிடத் தொகுதிகள் 55 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X