2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தமிழர்களை பாதுகாப்பு தரப்பினர் எதிரிகளாக பார்க்கின்றனர்: சரவணபவன் எம்.பி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 28 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்கே.பிரசாத், ரி.சுமித்தி)

ஜனநாயகவழிப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ் மக்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் படையினரும் பொலிஸாரும் எதிரிகளாக பார்த்து வருகின்றனர். இதனால் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

இராணுவத்தினரும் பொலிஸாரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

யாழ். உதயன் விருந்தினர் விடுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

'மக்களின் ஜனநாயகவழிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இராணுவமும் பொலிஸாரும் பல்வேறு விதத்தில் செயற்பட்டு வருகின்றனர். நீதிமன்றங்கள் ஊடாக தடுப்பதற்கான முயற்சியும் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று யாழ் பல்கலைக்கழத்தில் ஜனநாயக முறையில் நடைபெற்ற போராட்டம் திட்டமிட்டவகையில் தடுக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் பல மைல்கள் நடந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இங்கு எமது மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு வெளியில் வரமுடியாத அளவுக்கு அடக்குமுறை பிரயோகிக்கப்ட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்தச் சம்பவமானது சர்வதிகாரப் போக்கை காட்டியுள்ளதுடன் 5 வருடம் பின்னோக்கி தள்ளியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டபோதுதான், தமிழர்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். போரை வெற்றிகொண்ட களிப்பில் இன்று அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அதே அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு களிப்பில் இருக்க வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதிக்கும் அவருடன் இருப்பவர்களும் தமிழ் மக்களின் உணர்வுகளை ஆராய்ந்த பின்னரே நல்லிணக்கம் என்ற ஒன்றைப்பற்றி சிந்திக்க வேண்டும். இன்றைய சம்பவத்தின் போது, யாழ் பல்கலைகழக மாணவர்கள் இராணுவத்தினராலும், பொலிஸாராலும் தாக்கப்பட்டனர்.

இதன்போது யாழ். பல்லைக்கழக மாணவர்களுக்கு பொறுப்பான துணைவேந்தர் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். மாணவர்கள் தாக்கப்படுவதை பார்த்துவிட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் அல்ல.

எல்லா பிரச்சினைகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர், ஓடி ஒழிந்து விட்டு துணைவேந்தராக இருப்பது வெட்கமான விடயம், அதைவிட அவர் தனது பதவியை இராஜினாமா செய்வது சாலவும் சிறந்தது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .