2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மக்கள் ஆணையை மதிக்கவேண்டும்: கமலேந்திரன்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் செயற்படவேண்டும் என வடமாகாண சபை எதிர்க்ட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்
 
நேற்று முன்தினம் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
 
வடமாகாண சபை தேர்தல் முடிவடைந்து மூன்று வாரங்களாகிவிட்டபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கிடையிலான பதவிப் போட்டிகள் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
 
கூட்டமைப்பிலுள்ள அங்கத்துவக் கட்சிகளின் பல்வேறு அழுத்தங்களால் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட விக்னேஸ்வரனை தமிழ் மக்கள் முழு விருப்பத்தோடு பெரும்பான்மையான விருப்பு வாக்குகளை வழங்கி முதலமைச்சராக தெரிவு செய்திருக்கின்றார்கள்.
 
இதனால் 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று ஏற்றுக்கொள்வதுதான் நியாயமானதாகும். ஆனால் கூட்டமைப்பிலுள்ள அங்கத்துவக் கட்சிகள் விக்னேஸ்வரனுக்கு தொடர்ந்து தர்மசங்கடத்தையும், அவமானங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
 
விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்த நிகழ்வை அங்கத்துவக் கட்சிகள் பகிஸ்கரித்திருந்த போதும், அந்த அவமானத்தை பெருந்தன்மையோடு முதலமைச்சர் பொறுத்துக் கொண்டார்.
 
தொடர்ந்து வடமாகாண சபை அமைச்சர்களை தகுதிகள் சார்ந்தும், பல்வேறு நலன்சார் காரணங்களுக்காகவும் சிறப்பாகச் சிந்தித்து நியமித்தும், கூட்டமைப்பிலுள்ள அங்கத்துவக் கட்சிகள் அதனை விமர்சிக்கின்றன.
 
அவர்கள் தங்கள் தங்கள் கட்சி நலனை மட்டும் கருத்திற்கொண்டு இந்த அமைச்சரவையை நிராகரித்தும் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்திருப்பதும், முதலமைச்சர் மீது ஆரம்பத்திலேயே அநாவசியமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் செயலாகவே அமைந்துள்ளது.
 
இது தமிழ் மக்கள் வழங்கிய மகத்தான ஆணையை அவமதிப்பதாகவுள்ளதுடன், வடமாகாண சபையை வலிமையான சபையாக வழிநடத்த விடாமலும், வட மாகாண முதலமைச்சரான விக்னேஸ்வரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.
 
கூட்டமைப்பிலுள்ள அங்கத்துவக்கட்சிகளின் தங்கள் தங்கள் கட்சி நலன் சார்ந்த சர்ச்சையால் முதலமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டு விட்டாரோ என்று தோன்றுகின்றது.
 
நடைமுறை அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு சாணக்கியமாக செயற்படும்போதே வடமாகாண சபையை எம்மால் பாதுகாத்து பலப்படுத்த முடியும். ஒற்றுமையீனங்களுக்கு மாகாண சபையை பலி கொடுத்துவிடும். ஆகவே அதற்கு எவரும் இடமளித்துவிடக்கூடாது.
 
வடக்கு மாகாண சபையை சிதைத்து பலமிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்படும் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் பதவிகளின் பெயராலும், கட்சி நலனின் பெயராலும் வடமாகாண சபையின் அத்திவாரத்தை ஆட்டங்காணச் செய்கின்றார்கள்.
 
கூட்டமைப்பிலுள்ள அங்கத்துவக் கட்சிகள் தமிழ் மக்களின் ஆணையையும், எதிர்பார்ப்பையும் சிதைத்து பெரும் வரலாற்றுத் துரோகத்தை செய்துவிடக்கூடாது. முதலமைச்சரை முழு விருப்பத்தோடுதான் தெரிவு செய்தது உண்மையென்றால், முதலமைச்சர் எடுக்கும் தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
 
முதலமைச்சரை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் செயற்படவும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் ஒத்துழைத்துச் செயலாற்ற வேண்டுமென வடமாகாண சபையின் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .