2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 12 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்., எழுவைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த 15 மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எஸ்.மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார்.

இந்திய புதுக்கோட்டை ஜனதா பட்டிணத்திலிருந்து 4 படகுகளில் வந்த 15 மீனவர்கள் கடந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை இரவு எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் எனக்கூறி காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்கள் வந்த படகுகளும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, இவர்களை யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் கடந்த மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, இந்த மீனவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில், குறித்த வழக்கு கடந்த மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நவம்பர் 11ஆம் திகதி வரை தொடர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து மேற்படி மீனவர்களின் வழக்கு நேற்று திங்கட்கிழமை (11) நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரிடமிருந்து எதுவித ஆலோசனைகளும் இதுவரை கிடைக்காததினால் மேற்படி மீனவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .