
வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், நெடுந்தீவுப் பிரதேசத்தில் விவசாய மற்றும் சூழற்பாதிப்புக்கள் பற்றிய கள ஆய்வொன்றை நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளார்.
நெடுந்தீவு மக்களை நேற்று முன்தினம் புதன்கிழமை (13) சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர், நெடுந்தீவு மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
நெடுந்தீவுப் பிரதேசத்தில் கடல் காற்றினால் தரை உப்பேறுகின்றதுடன், நன்னீர் கிடைக்கும் சாராப்பிட்டிக் கிணறுகளில் அதிகப்படியாக நீர் பயன்பாட்டிற்கு எடுப்பதினால் நீர் உவராகிக்கொண்டு வருகின்றது. நன்னீர் உள்ள இடங்களில் மண்வளம் இல்லாது இருப்பதுடன், மண்வளமுள்ள இடங்களில் நன்னீர் இல்லாமலும் இருக்கின்றது.
இப்பிரதேசங்களிலுள்ள குதிரைகள், மாடுகள், ஆடுகள் கோடை காலங்களில் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றன. அத்துடன். கடற்கரைகளில் மணல் அகழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்படி பிரச்சினைகளும் முன்னுரிமை கொடுத்து விரைவில் தீர்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கடற்கரையோரங்களில் சவுக்கு மரங்களை வளர்த்து காற்றுத்தடுப்பு வேலி அமைத்தல், சாராப்பிட்டி பகுதியில் மழைநீரை தரைக்குக்கீழ் சேமித்து அப்பகுதியை பசுஞ்சோலையாக மாற்றி நீர்ப்பிடிப்பை அதிகரிக்கச் செய்தல், சேதன வேளாண்மையை ஊக்குவித்து நெடுந்தீவின் மண்வளத்தை உயிர்ப்பிப்பது, நெடுந்தீவில் சூழல்சார் சுற்றுலாவை ஊக்குவித்தல் போன்ற திட்டங்கள் இங்குள்ள பிரச்சினைகளின் தீர்விற்கான சாத்தியப்பாடுகள் ஆகும்.
ஆகவே இதுகுறித்த ஆய்வறிக்கையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இத்திட்டங்களை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளில் வாழும் நெடுந்தீவினைச் சேர்ந்த மக்கள் உதவுவதற்குத் தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.