2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வட, கிழக்கு மாகாணங்களில் பெண்களின் அரசியல் பிரவேசம் அதிகரிக்கப்பட வேண்டும்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 11 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண் தலைமைத்துவக்  குடும்பங்கள் அதிகமாகவுள்ளபோதிலும், அவர்களின் அரசியல் பங்களிப்பு குறைவாக உள்ளதென வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

இந்நிலை மாறி பெண்களின் நிலை உயர்வடைவதற்கு அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதுடன், பெண்கள் துணிந்து அரசியலில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

வலி. மேற்கு (சுழிபுரம்) பிரதேச சபையின் ஏற்பாட்டில்  சர்வதேச மகளிர் தின விழா அப்பிரதேச சபைக் கட்டிடத்தில்  திங்கட்கிழமை (10) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் மேலும் உரையாற்றுகையில்,

'சுதந்திரம்  சும்மா கிடைத்துவிடாது. போராடினால் மாத்திரமே அதைப் பெற்றுக்கொள்ளலாம். பிரஞ்சுப் புரட்சியின்போது கி.பி. 1789ஆம் ஆண்டு; பெண்கள் வீதிக்கு வந்து தங்களது உரிமைகளுக்காக  போராடினர்.  இந்த மகளிர் தினம் கூட  சம உரிமை, வாக்குரிமை வேண்டி பெண்கள் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவால்  கிடைத்தது. 1911ஆம் ஆண்டு மகளிர் பெற்ற உரிமை போராட்டத்தின் வெற்றி இப்பொழுது உலகம் பூராகவும் மகளிர்தினமாக கொண்டாடப்படுகிறது.

அகிம்சைப் போராட்டத்திலும் சரி, எமது ஆயுதப் போராட்டத்திலும் சரி தமிழ்ப் பெண்கள் அளப்பரிய சாதனைகளை நிலைநாட்டினர். ஆயுதப் போராட்டத்தில் பெரும் தளபதிகளாகவும் சிப்பாய்களாகவும் இருந்த எமது தமிழ்ப் பெண்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. பல போராட்டங்களின் வெற்றிக்கு பெண்கள் அணியே காரணமாக இருந்ததை நாம் மறக்கமுடியாது.

ஆனால், இன்று பல வழிகளிலும் பல இன்னல்களை எமது பெண்கள் அனுபவிக்கின்றனர். சகோதரனை, தந்தையை, கணவனை, மகனை யுத்தத்தில் பறிகொடுத்தும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் எமது பெண்கள் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மொத்தம் 224 உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மொத்தமாக  09  பெண்களே உள்ளனர். இதிலும் சபையின் தவிசாளர்களாக இருவரே உள்ளனர்.

யுத்தத்தின் மூலம் நாம் விரும்பியோ, விரும்பாமலோ இன்று எமது பகுதியில் பெண்களே அதிகளவிலுள்ளதுடன், வாக்காளர்களாகவும் உள்ளனர்.  ஆனால், பெண்களின் அரசியல் பிரவேசம்  மிகக் குறைந்தளவில் உள்ளது. இந்நிலை மாறி பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபட்டு, பெண்களினதும் சமூகத்தினதும் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், சட்டத்தரணிகளான  உமா தங்கவேல், காயத்ரி குமாரதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .