2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு செல்லலாம், திரும்ப முடியாது: டக்ளஸ்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , மு.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

இந்தியாவுக்கு தன்னால்   செல்லமுடியும். ஆனால், திரும்பி வரமுடியாதென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்  கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில்  செவ்வாய்க்கிழமை (11) ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, 'இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் படகு முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தீர்கள். இப்போராட்டம் முன்னெடுக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு  பதிலளிக்கையிலேயே  அமைச்சர் மேற்கண்டவாறு  கூறினார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இப்பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் கலந்துகொள்வேன். அத்துடன், இப்பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறுமாகவிருந்தால் நான் அங்கு செல்ல முடியாது. அவ்வாறு நான் சென்றாலும் திரும்பி வரமுடியாது. அது ஒருவழிப்பாதை என்பது உங்களுக்கு புரியும்' என்றார்.

ஐ.நா. மற்றும் அமெரிக்கா எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியில்


ஐ.நா. மற்றும் அமெரிக்கா எங்கள் மீதுள்ள (ஈ.பி.டி.பி. கட்சி மீது) காழ்ப்புணர்ச்சிகளை அறிக்கைகள் மூலம் வெளிக்காட்டி வருகின்றன.
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் பேசப்படுகின்றன. ஐ.நா. அமர்வுக்;கு முன்னர் இலங்கையை சர்வதேசம் பல்வேறு கோணங்களில் பார்க்கிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணைகளை சர்வதேச நாடுகள் கொண்டுவரப் போகின்றன என்று கூட்டமைப்பு மக்கள் மத்தியில்  தவறான பிரச்சாரத்தை முன்வைத்தது.

அதாவது இம்முறை கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு சர்வயோக நிவாரணி என்றெல்லாம் கூட்டமைப்பு சொல்லி வந்தது. 'அழுதாலும் அவளே பிள்ளையைப் பெறவேண்டும்'. ஒரு பிள்ளையைப் பெறுவதற்கு சர்வதேசம் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாமே தவிர பிள்ளையைப் பெறமுடியாது என்ற யதார்த்தத்தை கூட்டமைப்பு புரிந்து கொள்ளவில்லை.

ஜெனீவா தீர்மானத்திற்கு பின்னர் மக்கள் தங்களை தவறாக புரிந்துகொள்ளப் போகின்றார்கள் என்பதற்கான முதலைக் கண்ணீர் வடித்து சர்வதேசம் எங்களை ஏமாற்றி விட்டாதாக தற்போது தெரிவித்து வருகின்றார்கள். ஆனால், மக்களுக்கு சரியான கருத்தைச் சொல்ல வேண்டிய தேவை எமக்குள்ளது.

எங்கள் கட்சி (ஈ.பி.டி.பி) மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் தங்களுக்கு இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியை அறிக்கைகள் மூலம் வெளிக்காட்டி வருகின்றார்கள். இது உண்மைக்குப் புறம்பானது பக்கச்சார்பான விடயம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எமது கட்சி தொடர்பில் வெளியான கருத்து தொடர்பில் நாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய முயற்சித்தோம். அத்தோடு எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களைத்  தவிர நாங்கள் ஏனையவற்றை வரவேற்றதுடன்,  அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அந்த அறிக்கையைக் கொண்டு சர்வதேச நாடுகள் எங்கள் மீது தவறான சிந்தனையைக் கொண்டுள்ளன.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு நான் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதோடு, இலங்கைக்கு வந்தபோது எமது  நிலைப்பாடு தொடர்பில் அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தோம்;.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் அக்கறையில்லாத சிலர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் தீர்வு வழங்க வேண்டும் என்பதை விரும்புகின்றார்கள். ஆகவே கூட்டமைப்பும் தெரிவுக்குழுவில் இணைந்து தமது கருத்தை முன்வைக்க வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .