2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 12 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். - கண்டி வீதி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வளாகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதனை நிறுத்துமாறும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அம்மக்கள் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மேற்படி பகுதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இருந்த கட்டிடம் தகர்த்து எடுக்கப்பட்டு அவ்விடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அனுமதியினை யாழ். மாநகர சபையிடம் கோரிய போது யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அதற்கான அனுமதியினை மறுத்திருந்தார்.

இது தொடர்பாக தீக்மானம் எடுக்கும் ககலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அப்பகுதி மக்கள் மற்றும் எரிபொருள் நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டவர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கருத்து கூறுகையில், 'அவ்விடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டால், சுற்றுச்சூழல் மாசடைந்துவிடுமென்றும் அவ்விடத்தில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படும்' என்று கூறினார்கள்.

இதற்கு பதிலளித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள், இவ்விடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டால், சுற்றுச்சூழல் மாசடைவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும், அவ்விடத்தில் அமைப்பதற்கான அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்ததுடன், அதற்காக நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இருதரப்பு கருத்துக்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செவிமடுத்ததுடன், குறித்த இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக குழு ஒன்றினை நியமித்து, இரு தரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னர், நீதிமன்றில் வழக்கு தொடர்வது குறித்து தீர்மானம் எடுப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .