2025 ஜூன் 28, சனிக்கிழமை

பொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மார்ச் 16 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ்ஜின் (23) கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷீர் மொஹமட் ஞாயிற்றுக்கிழமை (16) உத்தரவிட்டார்.

மேற்படி நால்வரையும் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

மேற்படி கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் நால்வரான சுந்தரலிங்கம் சிவகர் (22), சிவசங்கநாதன் மதுஷன் (20), இன்பசீலன் பிருந்தாமன் (21), ரமேஷ; கொன்ரன்கரன் (21) ஆகியோரை சனிக்கிழமை மாலை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்தனர்.
சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குக்கும் இடையில் வருடாந்தம் பொன் அணிகளின் போர் துடுப்பாட்டப் போட்டி நடாத்தப்பட்டது.

அதில், 26 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர்கள் கொண்ட இந்தப் போட்டியின் ஆட்டம் நேற்று யாழ்ப்பாணக் கல்லூரியில் மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது திடீரென இரு பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்றப்பட்டது. இக் கைகலப்பில் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான யாழ்ப்பாணம் செட்டியார்தெரு சேர்ந்த ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (வயது 23) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

 மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களை தேடி வருவதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .