2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'வடமாகாண நீர்வள அபிவிருத்தி' ஆய்வரங்கு

Suganthini Ratnam   / 2014 மே 12 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு மாகாணத்தின் நீர் வளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் 02  நாட்களைக் கொண்ட  ஆய்வரங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு  வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு  தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில்  வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் திங்கட்கிழமை (12)  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வடக்கு மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட 05 மாவட்டங்களிலும் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நன்னீரின் பயன்பாடு அதிகரித்துச் செல்லும் அதேசமயம்,  நன்னீருக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், சூழல் விரோதச் செயற்பாடுகளால் இருக்கின்ற நீரிலும் மாசுக்கள் கலந்து வருகின்றன. பூமி வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் வருங்காலத்தில்; அதிக வறட்சியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எமது மக்களின் உயிர் ஆதாரமும் விவசாயப் பொருளாதாரத்தின் மூலாதாரமுமான நன்னீர் வளத்தைக் காப்புச் செய்து, அதை நிலைபேறான அபிவிருத்தி அடையச் செய்யவேண்டிய பாரிய பொறுப்பு வடக்கு மாகாண சபையினராகிய எங்களுக்குண்டு.

அதற்கேற்ற கொள்கைகளை வகுத்து திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னோடியாக எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் வடமாகாண நீர்வள அபிவிருத்தி தொடர்பான 02  நாட்களைக் கொண்ட  ஆய்வரங்கை  நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் நீரியலுடன் தொடர்புடைய நிபுணர்களை இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

கலந்துகொள்ள விரும்பும் ஆய்வறிஞர்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 05ஆம் திகதிக்கு முன்பாக விவசாய அமைச்சு, இல. 295 கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது npagrimini@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களது பெயர் விபரங்களையும் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக்கட்டுரையின் உத்தேச தலைப்பையும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

வடக்கின் இருப்பு நன்னீர் வளத்தின் கையிருப்பிலேயே தங்கியிருப்பதால் இம்முயற்சியில் ஆய்வாளர்கள் அனைவரையும் தவறாது பங்கேற்குமாறு கோருகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X