2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இரணைமடுவின் நோக்கத்தை உணர வேண்டும்: டக்ளஸ்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.குடாநாட்டில் குடிநீருக்கான பாரிய தட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் உருவாகும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடு குளத்திலிருந்து யாழ்.குடாநாட்டிற்கு குடிநீரை கொண்டு வரும் திட்டமானது ஒருசில சுயலாப அரசியல்வாதிகளால் தங்களது குறுகிய நோக்கங்களுக்காக தடையேற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் இத்திட்டம் தொடர்பிலான உண்மையான நோக்கம் குறித்து எமது மக்கள் விழிப்படையச் செய்ய வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் தொடர்பில் யாழ்.மாவட்ட சமுர்த்தி அலுவலர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிகச் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற போது வெள்ளி;க்கிழமை (16) தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள இரணைமடு குளத்தின் நீர் கசிந்து வீண் விரயமாகின்ற நிலையில் இக்குளத்தை மீளப் புனரமைத்து இரண்டு அடிகள் உயர்த்தி குளத்தின் கீழ் வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்ட பின்னர் மொத்தக் கொள்கலனிலிருந்து 10 வீதத்திற்கு குறைந்த நீரினை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்களுக்கு  குடிநீருக்காக பெறுவதே இத்திட்;டத்தின் நோக்கமாகும்.
இந்நீர் குடிநீராக சுத்திகரிக்கப்பட்டு கிளிநொச்சி, பூநகரி, பளை உட்பட யாழ்.குடாநாட்டு மக்களின் பயன்பாட்டிற்கென வழங்கப்படவுள்ளது.

தங்களது குறுகிய நோக்கங்களுக்காக சில சுயலாப அரசியல்வாதிகள் இத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மக்களை தவறான திசைக்கு திருப்பி வருகின்றனர்.

எனவே, இத்திட்டம் தொடர்பில் எமது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இத்திட்டத்தின் நோக்கம் தொடர்பில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பணிப்பாளர் திரு. பாரதிதாசன் காட்சிகைப் படுத்திய விளக்கவுரை நிகழ்த்தினார்.

யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர் நிலைகள் தொடர்பில் பேராசிரியர் சிவச்சந்திரன் மிகத் தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

2025ஆம் வருடமாகும் போது யாழ்.குடாநாட்டில் நிலத்தடி நீரின்றிய நிலை ஏற்படும் என்றும் இதன்போது சுத்தமான குடிநீரை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு என்றும் அப்படி செய்ய இயலாது அரசியல்வாதிகள் இருப்பதால் பயன் ஏதுமில்லை என்றும் தெரிவித்த பேராசிரியர் யாழ்.குடாநாட்டுக்கு மழைநீர் தரக்கூடிய பிரதான நிலையாக இரணைமடு இருப்பதை உணர்த்தினார்.

நாட்டில் பாதுகாப்பான குழாய் நீர் ஏனைய மாகாணங்களில் சராசரி 45 வீதமாக இருக்கும் நிலையில் வட மாகாணத்தில் இரு 6 வீதமாகவே இருக்கிறது.

தற்போது குடாநாட்டில் பயன்படுத்தப்படும் நிலத்தடி குடிநீரில் அசுத்தத் தன்மைகள் பல காணப்படுவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதும் எதிர்காலச் சந்ததிகள் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டதாக இருக்கும் என்பதும் இங்கு பலராலும் உணர்த்தப்பட்டது.

நிகழ்வில் இறுதியில் இரணைமடுத் திட்டத்தின் உண்மையான நோக்கங்களை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துவதாகவும் இத்திட்டத்திற்கு துணை நிற்பதாகவும் சமுர்த்தி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X