2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மனைப்பொருளியல் கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 02 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன் 

பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே மனைப் பொருளியல் தொடர்பான விளக்கங்களை வழங்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மனைப்பொருளியல் பிரிவின் ஏற்பாட்டில், எதிர்வரும் புதன்கிழமை (04) கலைப்பீட கட்டிடத் தொகுதியில் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக மனைப்பொருளியல் பிரிவின் விரிவுரையாளர் பி.குலராஜசிங்கம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மனைப்பொருளியல் பிரிவில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மனைப்பொருளியல் என்று 04 வருடக் கற்கைநெறி இருக்கின்றபோதும், அது தொடர்பில் போதிய விளக்கங்கள் மாணவர்களிடையே இல்லாத காரணத்தினால் அதனைக் கற்பதற்கு மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மனைப் பொருளியல் பிரிவில் நிரந்தர விரிவுரையாளராக தானும் தற்காலிக விரிவுரையாளர் ஒருவரும் கடமையாற்றுவதுடன், இங்கு 20 மாணவர்கள் மட்டுமே மனைப் பொருளியல் கற்கைநெறியினை கற்கின்றனர்.

அதிலும் 12 மாணவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.  எமது சமூகத்தில் மனைப்பொருளியல் தொடர்பில் இழிவான ஒரு நோக்கே காணப்படுகின்றது. குறிப்பாகச் சொன்னால் சமைப்பது எப்படி எனப் படிப்பது என்பார்கள்.

ஆனால், மனைப்பொருளியல் என்பது அதுவல்ல. அது குடும்பப் பொருளாதாரம் என்ற விடயத்தினைச் சார்ந்ததென்பதுடன், அதனைக் கற்பதன் மூலம் மாணவர்கள் சுயதொழில்களில் ஈடுபடவும் அவர்களாக புதிய விடயங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும்.

இந்நிலையில் மனைப் பொருளியல் தொடர்பில் சிறந்த விளக்கங்களை அளிக்கும் நோக்குடனும், சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடனும் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு, பான வகைகள், நவீன தையல் முறைகள், விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் ஹோட்டல் துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X