2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணியினைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 04 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

பெண்ணொருவரைக் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு அவரைத் திருமணம் செய்ய மறுத்த வரணி வாசியொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

வடமராட்சியினைச் சேர்ந்த குறித்த பெண் ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையிருப்பதுடன், அவரது கணவன் அவரை விட்டுப்பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் பருத்தித்துறை – முல்லைத்தீவு பஸ் சாரதியான மேற்படி வரணி வாசியுடன் பஸ்ஸில் சென்று வருகையில் காதல் வயப்பட்டுள்ளனர். இதன்பின்னார் வரணி வாசி மூலம் குறித்த பெண் கர்ப்பம் தரித்த நிலையில், தன்னைத் திருமணம் செய்யும் படி குறித்த பெண் வரணி வாசியிடம் கேட்டிருக்கின்றார்.

இருந்தும் அதற்கு அவர் மறுக்கவே குறித்த பெண் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பொலிஸார் குறித்த விடயத்தினை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கடந்த மே 21 (புதன்கிழமை) கொண்டு வந்தபோது, குறித்த நபர் கர்ப்பிணியான அந்தப் பெண்ணைத் தனது மனைவியாக ஏற்றுகொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணிடம் உமது முதல் குழந்தையினை என்ன செய்யப்போகின்றீர்கள் என நீதவான் கேட்டபோது, அதனை தனது தாயாரிடம் (குழந்தையின் அம்மம்மா) கொடுத்துவிட்டு இவருடன் செல்வதாகத் குறித்த பெண் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அடுத்த தவணையன்று (இன்று) திருமணம் செய்துகொண்ட திருமணச் சான்றிதழுடன் வருமாறு வரணி வாசிக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சந்தேகநபரான வரணிவாசி இன்றைக்கு  4 நாட்களுக்கு பின்னர் குறித்த பெண்ணை வீட்டைவிட்டுத் துரத்தியுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேற்படி விடயத்தினை குறித்த பெண், நீதவானிடம் தெரிவித்தார்.

அதன்போது, சந்தேகநபர் தனக்கு இந்த பெண்ணின் கர்ப்பத்திற்கும் சம்பந்தமில்லையெனவும், அப்பெண்ணை ஏற்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறும், கர்ப்பம் தொடர்பாக மரபணு (டி.என்.ஏ) பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கொடிகாமம் பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X