2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி முன்வந்தமையை வரவேற்கிறோம்'

Suganthini Ratnam   / 2015 மே 15 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதை தாம் வரவேற்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொழும்பில் இந்திய மீனவப் பிரதிநிதிகளுடன்  ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக தீர்வு காணப்படாத நிலையிலுள்ளது. குறிப்பாக, இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழிற்றுறை நடவடிக்கைகளால் வடபகுதியின் கடல்வளங்களும் கடற்பாறைகளும் அழிவடைந்துவரும் அதேவேளை, எமது கடற்றொழிலாளர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட தொழிற்றுறை சார்ந்த உபகரணங்களும் சேதமடைகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ஆகியோரது அனுமதியுடன் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தின்போது, இரு தரப்பு மீனவர்களுடனும் எனது தலைமையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நாளடைவில் இந்திய மீனவர்களது நடவடிக்கைகளால் தோல்வி கண்டிருந்தமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்நிலையில், வடபகுதி கடற்றொழிலாளர்களது தொழிற்றுறை பாதிப்பால் அவர்களது வாழ்வாதாரம், பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் ஜனாதிபதி அதிக அக்கறை செலுத்தி உரிய தீர்வை காண முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இருநாட்டு மீனவர்களுக்குமிடையே நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான வகையில் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்திருப்பதை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் முழுமனதுடன் வரவேற்கும் அதேவேளை, இதற்கு எம்மாலான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கவும் தயாராகவிருக்கின்றோம் என்றும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே மீனவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் நேரத்தில் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழிற்றுறைகளை இந்திய மீனவர்கள் கைவிட வேண்டுமென்பதுடன் தீர்வு முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .