Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 11 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அறிவியல் நகரில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த 600 ஏக்கர் காணியை இராணுவ பயிற்சிப் பாசறையை அமைப்பதற்கு இராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர். எனினும், நாம் எமது அரசியல் அணுகுமுறைக்கு ஊடாக மிகவும் தந்திரோபாயமான முறையில் அந்தப் பிரச்சினையை கையாண்டு, அவர்களின் முயற்சியை நிறுத்தி 600 ஏக்கர் காணியையும் பல்கலைக்கழகமாக மாற்றியிருப்பதோடு ஜேர்மன் இலங்கை தொழில்நுட்ப நிறுவனம், மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகம், உள்ளிட்ட அறிவியல்சார் நிறுவனங்கள் நிறைந்த பிரதேசமாக மாற்றியிருக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் கருத்துக்கூறுகையில்,அறிவியல்நகர் பிரதேசம் இராணுவ பயிற்சி முகாமாக மாறியிருந்தால், அந்தப் பகுதியில் மக்கள் குடியிருக்க முடியாதளவுக்கு சூழல் மாறியிருக்கும். மக்கள் நிம்மதியான வாழ்வை வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 வருட கனவான கிளிநொச்சி வளாக பீடங்களான விவசாய மற்றும் பொறியியல் பீடங்கள் என்பன அமைந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது எனச் சுட்டிக்காட்டினார்.
அறிவியல்நகர் பிரதேசத்தை முதலீட்டு பிரதேசமாக மாற்ற வேண்டும் என்கின்ற எண்ணத்தில், பல தொழில் வழங்கும் நிறுவனங்களை எமது பகுதிகளுக்கு வரவழைத்து, வர்த்தக கேந்திர நிலையமாக அறிவியல் நகரை உருவாக்கியியுள்ளோம்.
ஒவ்வொரு நிறுவனங்களும் தொழில் மையங்களை குறித்த பிரதேசத்தில் அமைப்பதற்காக காணிகளை ஒதுக்கி வேலைத்திட்டங்களை வேகமாக ஆரம்பிப்பதற்கான சூழலை கடந்த காலத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த போது ஏற்படுத்தியிருந்தோம்.
50 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டங்களை எமது பகுதிகளில் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்தது. பல்கலைக்கழகத்துக்கு அருகில் சிறப்பான ஒரு குடியிருப்பு பிரதேசம் அமைக்க வேண்டும் என்கின்ற விருப்பில் அறிவியல் நகரில் காணிகளை ஒதுக்கி, இந்திய வீட்டுத்திட்டத்தின் மாதிரிக் கிராமத்தை அமைத்தோம் என்றார்.
விவசாய பீட வளாகத்தில் பல நிலப்பரப்புகள் எதிர்காலத்தில் பாரிய பண்ணைகள் அமைக்கப்படவுள்ளன. இதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த பல இளைஞர், யுவதிகள் நிரந்தர தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
யாழ்.ப்பாணத்தில் பொறியியல் பீடம் இல்லாத காரணத்தினால் எமது மாணவர்கள் கொழும்புக்கு சென்று கல்வி கற்க வேண்டிய சூழல் காணப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் இருந்து யாழ்;ப்பாணத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் கனவாக இருந்தது. 35 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் மக்களின் கனவு நனவாகியது. 1978 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் கட்சிகள் பல யாழ்ப்பாணத்தில் பொறியியல் பீடம் அமைக்க வேண்டும் என போராட்டங்களை நடத்தியும் அது வெற்றிபெறவில்லை.
மக்களின் விடுதலைக்காக போராடிய முன்னாள் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொருவர் வீதம் வேட்பாளர்களை நியமிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்.
அந்த கோரிக்கை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளையும், அவர்களின் தியாகங்களையும் கூறி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளை அபகரிக்கும் கூட்டமைப்பினர், இந்த மக்களுக்காக இறுதி வரை போராடிய போராளிகளுக்கு மதிப்பளிக்காது, இராணுவத்தினரின் உளவாளிகள் எனக் கூறுவது நியாயமானதா? என கேள்வியெழுப்பினார்.
மக்களின் விடுதலைக்காக வியர்வைகூட சிந்தாதவர்கள். இளம் தலைமுறையினரை உசுப்பேத்தி யுத்தத்துக்கு அனுப்பிவிட்டு, தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக அரசாங்கத்துடன் பின்பக்க கதவால் பேசி தமது காரியங்களை சாதித்து வருகின்றனர். துன்பங்களை தொடர்ந்தும் அனுபவிப்பது அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகளே.
இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்கள் இன்று சுகபோக வாழ்க்கை வாழும் நிலையில், ஆயுதமேந்தி போராடிய முன்னாள் போராளிகள் ஒருவேளை உணவு உண்பதற்கு கூட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
26 minute ago