2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நாம் வீழ்ந்த இனத்தினர் அல்ல என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்: சி.வி

Thipaan   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலில் தேவையற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாம் வீழ்ந்த இனத்தினர் அல்ல என்பதை எடுத்துக்காட்டவே சரித்திர ரீதியிலான வெளியீடுகள் விரைவில் வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை இந்து மாமன்றம் தனது 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி முன்னெடுக்கும் இந்து ஆராய்ச்சி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (31) ஸ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாமாகக் கூறினால் எமக்குப் புலிப்பட்டமும் தீவிரவாதப் பட்டமும் சூட்டி விடுவார்கள். விரைவில் சர்வதேச சரித்திர வல்லுநர் குழுவொன்று இலங்கையின் தமிழ் மக்கள் பற்றியும்  இலங்கையில் இந்து மதம் பற்றியும் ஆராய்ந்து ஆதார பூர்வமான வெளியீடொன்றினைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

உள்ளூர் சரித்திராசிரியர்கள் உண்மையை உள்ளவாறு கூறப் பயப்படுகின்றனர் அல்லது வேண்டுமென்றே பிறழ்வாகக் கூறத் தலைப்படுகின்றனர். இன்று பலவிதமான அகழ்வுகளும் கல்வெட்டுக்களும் உண்மையை உலகறியச் செய்யத் துடித்துக்கொண்டிருக்கின்றன.

பௌத்தம் இலங்கைக்கு வரமுன் இங்கு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்களின் பாரம்பரியம் என்ன என்பவை சம்பந்தமாகச் சர்வதேச சரித்திர நிபுணர் குழுவொன்று ஆதாரபூர்வமான வெளியீடொன்றைக் கொண்டு வந்தால் இன்று இந்த நாட்டில் நிலைபெற்றிருக்குந் தவறான முடிவுகள் யாவற்றையுந் தூக்கி எறிய வேண்டியிருக்கும்.

அப்பேர்ப்பட்ட குழுவொன்றை நியமிக்க எமது புலம்பெயர்ந்த தமிழ் இந்து சகோதர சகோதரிகள் முன்வரவேண்டும். முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இன்று இராவணன் ஒரு சிங்களவர் என்று கூறுவார் கூட இந் நாட்டில் உள்ளார்கள்.

சிங்களமொழி எவ்வாறு, எப்போது உதித்தது, அந்த மொழியைப் பேசத் தொடங்கிய பின்னர் தான் அவர்கள் சிங்களவர் என்ற நாமத்தைப் பெற்றார்கள்; என்பது பற்றியெல்லாம் எமது மக்கள் ஆராயாது இருந்து வருவதால்தான் பெரும்பான்மையினரின் அடக்கு முறை கட்டுக்கடங்காது செயல்ப்படுகின்றது. உண்மையை உணர்ந்து உரைத்திட நாங்கள் பின்நிற்கக் கூடாது.

அண்மையில் நாங்கள் இனப்படுகொலைபற்றிய பிரேரணையை நிறைவேற்றிய போது விக்னேஸ்வரனா இப்பேர்ப்பட்ட துவேஷம் நிறைந்த ஒரு பிரேரணையை நிறைவேற்றினான்?|| என்று எனது சிங்கள நண்பர்கள் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள். சட்ட ரீதியாக இனப்படுகொலையை இவர்களால் நிரூபிக்க முடியாதே? அதுவும் 67 வருடகாலத்தை முன்வைத்து இப்பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

யாரைக் குற்றம் சாட்டுகிறார் இவர்?|| எந்த அரசாங்கத்தைக் குறிப்பிடுகின்றார்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு நான் கூறிய பதில் - முதலில் உங்களைச் சிந்திக்க வைக்கவே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தேன். நடந்தவற்றை நீங்கள் உணர்ந்து கொண்டால்த்தான் எமக்குள் நல்லிணக்கம் ஏற்படலாம். உண்மையைத் தெரிந்து கொண்டால்த்தான் நாங்கள் செய்த பிழைகளைக் கைவிட்டு நல்லிணக்கம் நோக்கி நடக்கலாம் என்றேன்.

அத்துடன் சட்டப்படி இனப்படுகொலையைப் பார்ப்பது ஒரு கோணம். யார் இனப்படுகொலையில் ஈடுபட்டார்கள், அது இனப்படுகொலையா? ஆதாரங்கள் உண்டா, என்றெல்லாம் கேட்பது சட்டரீதியான கேள்விகள். நான் குறிப்பிடுவது சமூக ரீதியான விடயங்களை. எமக்கு நடந்ததை. இலங்கை பூராகவும் என் இளமைக் காலத்தில் பரந்து வாழ்ந்த தமிழ் மக்களை எவ்வாறு நீங்கள் அடித்துத் துரத்தித் தெற்கை உங்கள் சமூகத்தினர்களுக்கு மாத்திரம் என்று ஆக்கிவிட்டீர்களோ அதைப் பற்றித் தான் நான் குறிப்பிடுகின்றேன்' என்று கூறினேன்;.

இன்று நாம் ஒரு வீழ்ந்த இனமாக எம்மை நாமே ஏமாற்றி வருகின்றோம். அதுபோல் வாழும் இனமாக பெரும்பான்மையினர் உலகிற்குத் தம்மைக் காட்டி வருகின்றார்கள். தேர்தலில் தேவையற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாம் வீழ்ந்த இனத்தினர் அல்ல என்பதை எடுத்துக்காட்டவே சரித்திர ரீதியிலான வெளியீடுகள் விரைவில் வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.

நான் இங்கு அரசியல் பேசுவதாக எமது சகோதர சகோதரிகள் விசனப்படக் கூடாது. இந் நாட்டின் அரசியலுக்கு அடிப்படையாக அமைந்திருந்ததே எமது வரலாற்றுப் பிறழ்வுகளும் பிழைகளும் தான் என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .