Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்ரமணியம் பாஸ்கரன், எஸ். நிதர்ஷன்
வடக்கு கடலில் மீன்பிடிப்பதற்கு, தெற்கு மீனவர்களுக்கு கொழும்பு அனுமதி கொடுத்துவிட்டால், அதில் எவரும் தலையிடமுடியாது என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தென்னிலங்கை மீனவர்களின் வருகையால் வட பகுதி மீனவர்களின் வாழ்வுடைமை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட தொழில்களையும் மேற்கொண்டு எமது மீனவர்களை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றார்கள்.
சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் சட்டமுரண் மீன்பிடிகளை தடைசெய்ய வேண்டும் என்று அறத்தின் பக்கம் நின்று எமது மீனவர்கள் வாதாடுகின்றார்கள். நீதியின்மை, முறைகேடான தொழில் நடவடிக்கைகளை 2016.04.02ஆம் திகதி மாவட்ட செயலகம், முல்லைத்தீவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீனவர்கள் சுட்டிக்காட்டினார்கள். பிழையான தொழில் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்ற சுட்டிக்காட்டலை ஏற்றுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் அவற்றுக்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இன்று வரை எந்தவித நடவடிக்கைகளும் எடுத்தபாடில்லை. இதன் பின்பும், நடைபெறும் மோசமான தொழில் நடவடிக்கைகள் பற்றி கடந்த 2017.08.10ஆம்திகதி மாகாண சபைக் கூட்டத்திலும் தெரிவித்திருந்தேன்.
இச்சட்டமுரண் செயற்பாடுகள் தொடர்பாக 2017.08.14ஆம் திகதி மதிப்புறு முதலமைச்சர், கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு கடிதம் அனுப்பி, எனக்கும் அதன் பிரதியை அனுப்பியிருந்தார். இதற்கான மறுமொழியையும் கடந்த 2017.08.22ஆம் திகதி, கடற்றொழில் அமைச்சின் தனிப்பட்ட செயலாளர் ஜி.ஜி.சி காமினி, இச்சட்டமுரண் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாக கடற்றொழில் திணைக்களப் பணியாளருக்கு கடிதம் அனுப்பி, மதிப்புறு முதலமைச்சருக்கும் எனக்கும் பிரதியை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எம்.சி.எல் பெர்னாண்டோ தெரிவித்தாக பின்வரும் செய்தியைப் பார்க்க முடிந்தது.
வடக்குக் கடலில் மீன்பிடிப்பதற்கு தெற்கு மீனவர்களுக்கு கொழும்பு அனுமதி கொடுத்து விட்டால் வடக்கு அதிகாரிகள் எந்தவித இடைஞ்சல்களையும் செய்யக்கூடாது. இதில் உள்ளூர் மீனவர்களின் பிரச்சினைகளை கரிசனைகளை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எம்.சி.எல் பெர்ணான்டோ தெரிவித்தார்.
முறைகேடான தொழில்களை செய்தும் எமது மீனவர்களின் வளங்களை அழித்தும் எம்மை நடுத்தெருவில் விடுவதற்கு முயலும் சண்டித்தன செயல்பாடுகளை கொழும்பிலிருந்து அல்ல எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்துக்களை சரியான முறையில் விட வேண்டும் என கண்டிப்புடன் சொல்லி வைக்கின்றேன். வடபகுதி மீனவர்களை வேதனைப்படுத்தும் வகையில் விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என ரவிகரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago