2025 மே 21, புதன்கிழமை

‘தோட்டவெளிப்பகுதியில் தொடரும் மண் அகழ்வு’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தோட்டவெளிப்பகுதியில் புவிச்சரிதவியல், அளவை சுரங்கங்கள் பணியகத்தின் அனுமதியுடன், பெருமளவிலான மண் அகழ்வு நடவடிக்கைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக, மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு, அவர், வெள்ளிக்கிழமை (6) அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட தோட்டவெளிப்பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பு என்பதன் பெயரில் மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றது. எனினும் குறித்த பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பிற்கு மன்னார் பிரதேச சபையிடம் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில், முன்னைய காலங்களிலும், இறுதியாகவும் இடம்பெற்ற மாவட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் மன்னார் தீவிற்குட்பட்ட பகுதிகளில் மண் அகழ்வு முற்றாக தடை செய்யப்படுவது என தீர்மானம் எடுக்கப்பட்டது.

தோட்ட வெளிப்பகுதியில் மண் அகழ்வில் ஏற்பட்ட பள்ளங்களில் நீர் தேங்கி இருந்ததன் காரணமாக அண்மைக்காலத்தில் இரண்டு சிறுவர்கள் விழுந்து இறந்ததுடன் தேங்கியிருந்த நீரில் டெங்கு நுளம்பு பரவும் அபாயமும் காணப்பட்டது.

குறித்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக மண் அகழ்வுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மன்னார் பிரதேச சபையின் மக்கள் பிரதி நிதிகளுக்கான 9ஆவது மாதாந்த சபைக்கூட்டத்தில் மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் முற்றாக மண் அகழ்விற்கு தடை செய்வது என அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மன்னார் பிரதேச சபையால் தெரிவிக்கப்பட்டும், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் அனுமதியுடன் பெருமளவிலான மண்ணகழ்வு நடவடிக்கைகள் தற்போதும் இடம் பெற்று வருகின்றது.

எனவே, இந்த மண் அகழ்வைத் தடை செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X