Niroshini / 2021 நவம்பர் 08 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரி, பல்லவராயன்கட்டுச் சந்தியில் இருந்து பாலாவி வரையான வீதிப் புனரமைப்புகளுக்கென அமைக்கப்பட்ட பக்க பாதைகள், தற்போது பெருமளவில் வெள்ளம் தேங்கி நிற்பதற்கான காரணியாக அமைந்து விட்டது என, பூநகரி பிரதேச சபை உறுப்பினர் சி.சிறிரஞ்சன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பல்லவராயன்கட்டுச் சந்தியில் இருந்து பாலாவி வரையான 17 கிலோ மீற்றருக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட வீதி வேலைகள், கடந்த ஒன்றரை மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.
இந்நிலையில், பல்லவராயன்கட்டுச் சந்தியில் இருந்து சம்புவெளிப் பகுதி வரை அமைக்கப்பட்ட மதகுகளுக்கு அருகில் அமைக்கப்பட்ட பக்க பாதைகள் காரணமாக, கரியாலைநாகபடுவான்குளம், பல்லவராயன்கட்டு ஆகிய குளங்கள் நிரம்பி வான் பாய்கின்ற போது, பக்க பாதைகளினால் மூடப்பட்டுள்ள 14 மதகுகள் ஊடாக வெள்ள நீர் வடிந்தோட முடியாமல் வீதியில் பெருமளவு வெள்ளம் தேங்கி வெள்ள இடர் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது எனவும், அவர் கூறினார்.
பூநகரி பிரதேச சபைக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் நிதி உதவி வழங்கினால், மதகுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பக்க பாதைகளை பிரதேச சபையால் அகற்ற முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .