2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளன

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 ஜனவரி 02 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 நாட்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (02) 122 ஆவது நாளாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படவில்லை. மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்துள்ளது. அவற்றை சீர் செய்து அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு வேலி அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இன்று மன்னார் நீதவானுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறிப்பாக அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு  இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .