2026 பெப்ரவரி 21, சனிக்கிழமை

மின் தகன நிலையம் நிர்மாணம்: ’50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு’

Niroshini   / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், மின் தகன நிலையம் அமைப்பதற்காக, மன்னார் நகர சபையால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், இன்று (02) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டு வந்த  நிலையில், மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இதற்கமைவாக, நேற்று  (01), மன்னார் நகர சபையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், மன்னாரில் மின் தகன நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு, 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதென்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும், அவர் கூறினார்.

மேலும், பொது அஞ்சலி மண்டபம், சடலம் எரியூட்டும் இடத்துக்கு அருகாமையில் கிரியைகளை செய்வதற்கு தேவையான மண்டபம் மற்றும் மலசல கூடங்கள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த வேலைத்திட்டங்கள் இன்னும் சில நாள்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.

மன்னார் மாவட்டத்தில், மின் தகன நிலையம் அமைக்க 30 மில்லியன் ரூபாய் நிதி தேவை என்று தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நகர சபை 50 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X