2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


உலக மீனவர் தினமான இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த  மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை  முன்வைத்து  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேலிடம் கையளித்துள்ளனர்.

மன்னார்  மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் அதன்  தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள்   இன்று வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில்  ஒன்றுகூடி, அங்கிருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகத்திற்குச் சென்று குறித்த மகஜரை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர்  ஸ்ரான்லி டி மேலிடம் கையளித்தனர்.

மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'உலக மீனவர்  தினத்தில்  மன்னார்  மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியச் சிறைகளில் வாடும் இலங்கை மீனவர்களை விடுதலை செய்தல் தொடர்பாக   

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதிப்புக்கள், துயரங்கள் இதுவரையில் எவராலும் கண்டுகொள்ளப்படாமை, இதுவரையில்  இந்தப் பிரச்சினைகளுக்கு  தீர்வு காணப்படாமை. இதனால் தங்கள் இயலாமையின் வெளிப்பாட்டையும் ஆதங்கத்தையும் இன்றைய உலக மீனவர் தினத்தை பகிஷ்;கரிப்பதன் மூலம் உலகறியச் செய்யத் தீர்மானித்தோம்.

மன்னார் மாவட்டத்தில் நாற்பதாயிரம் உறவுகளைக் கொண்ட ஒன்பதாயிரம் குடும்பங்கள் மீன்பிடியின் மூலமான வாழ்வாதாரத்தை நம்பியவர்களாக உள்ளனர்.

தன் உயிரை பணயம் வைத்து உலகுக்கு உணவளிக்கும் இந்த  மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு  தீர்வு காண முடியாததுமல்ல. இந்த மீனவர்களுக்காக அனைவரும் சேர்ந்து தீர்வு காண்பதுடன், அவர்களின் துயர் துடைக்க வழிசமைப்போம்.

1.இந்திய இழுவைப்படகுகளின்  தொழில் ஆக்கிரமிப்பு
2.இந்திய அரசால் தடுத்துவைக்கப்பட்டுள்ள  இலங்கை மீனவர்களை விரைந்து விடுதலை செய்தல்
3.தென்பகுதி மீனவர்களின் மிதமிஞ்சிய வருகை
4.தடைசெய்யப்பட்  சிலிண்டர் தொழிலினால் தொழில் இழப்பு
5.அனர்த்தத்தின்போது பாதிக்கப்படும் மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாமை
6.எரிபொருள் மானிய முத்திரை நிறுத்தத்தின் தாக்கம்

இந்திய இழுவைப்படகுகளின்  தொழில் ஆக்கிரமிப்பு

1.இந்திய இழுவைப் படகுகள் எமது கடல் பகுதிக்குள் உள்நுழைந்து தொழில் செய்கின்றமையால் எமது வளங்கள் அழிக்கப்படுகின்றன.
2.போரின் வடுக்களிலிருந்து மீண்ட மக்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமை.
3.மீன் இனங்கள் வாழ்வதற்கு இயற்கையால் வழங்கப்பட்ட முருகைகற்களும் பவளப்பாறைகளும் அழிக்கப்படுகின்றன.
4.எதிர்காலச் சந்ததியினருக்கு வளங்கள் இல்லாது அழிக்கப்படுகின்றன.
5.சிறு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றாக இழந்துள்ளனர்.
6.பல இலட்சம்  ரூபா பெறுமதியான வலைகள், மீன்பிடி உபகரணங்கள் இந்திய  இழுவைப் படகுகளால் இழுத்து செல்லப்படுகின்றன, நாசமாக்கப்படுகின்றன. இதற்கான கொடுப்பனவுகளோ, நிவாரணங்களோ, மானியங்களோ வழங்கப்படுவதில்லை.
7.கடல் தாவரம் அழிக்கப்படுவதால் மீன்களுக்கும் குஞ்சுகளுக்கும் தேவையான உணவும் அதற்கான பாதுகாப்பும் இல்லாமல்ச் செய்யப்படுகின்றன.
8.எமது கடற்பரப்பில் நாளொன்றுக்கு பல கோடி ரூபா பெறுமதியான கடலுணவுகள்  சுரண்டப்படுகின்றன.
9.எமது மீனவர்கள் வாரத்தில் மூன்று தினங்களே எமது கடற்பரப்பில் தொழில் செய்யமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விரைந்து விடுதலை செய்தல்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் எமது கடற்பரப்பில் வைத்து எல்லை கடந்து வந்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய அரசால் கைதுசெய்யப்பட்டுள்ள எமது சகோதர மீனவர்களை விரைந்து விடுதலை செய்ய அரசு முன் வரவேண்டும்.

தென்பகுதி மீனவர்களின் மிதமிஞ்சிய வருகை

01.தென்பகுதி மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையாலும் இங்குள்ள மீனவர்களின் இறங்குதுறைகளில் அதிகளவு வாடிகளை   அமைக்கின்றமையாலும்  எமது மீனவர்கள் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்.
02.இங்குள்ள சங்கங்களின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை.
03.சங்கங்களிடம் அனுமதி பெறுவதில்லை.
04.தங்களுக்குள் சங்கம் அமைத்து தன்னிச்சையாக செயற்படுகின்றார்கள்.
05.அமைக்கும் வாடிகளை தொழில் காலம் முடிந்தவுடன் அகற்றாமல் செல்கின்றமை.
06.இவர்கள் வகை, தொகை இன்றி வருவதாலும் பருவகாலங்களில் இக்கடல் பிரதேசத்தை பயன்படுத்துவதாலும், இக்குறுகிய கடற்பிரதேசத்தை நம்பி வாழும் இக்கரையோர மக்கள் இப்பருவகால மீன்பிடியை இழக்கின்றனர்.
07.மூன்று தசாப்தங்களாக யுத்தத்தில் இருந்து மீண்ட எமது மக்கள் இன்னும் பொருளாதார முன்னேற்றங்கள் அற்ற நிலையிலே தொழில்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தென்பகுதி மீனவர்களின் வருகையில் எமது வாழ்வாதாரம் நலிவடைகின்றது.
08.ஆறு மாதகால தொழிலின்றி கடன்பட்டு நகைகளை அடகு வைத்து பிள்ளைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு போன்ற செலவுகளைக்கூட இந்த பருவகால மூலம் தான் தொழில் செய்து மீட்டுக் கொள்ளுகின்றனர்.
09.ஒவ்வொரு வருடமும் இவர்களது வருகை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்து அதிகரித்துக் கொண்டே போவதனால் எம்முடைய மீனவர்களின் அன்றாட மீன்பிடியில் பாரிய வீழ்ச்சி அடைகின்ற நிலையும் பட்டினி வாழ்வும் காணப்படுகின்றது.

தடைசெய்யப்பட்ட சிலின்டர் தொழிலை நிறுத்துதல்


01.எமது கடல் பகுதியில் அட்டை சங்கினை பாஸ் என்ற அனுமதியின் பெயரில் சிலின்டர் பயன்படுத்தி இத்தொழில் புரிவோர் பயனடைகின்றார்கள்.
02.மன்னார் மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களுக்கு வருமானத்தை தரக்கூடிய அட்டைச் சங்கு தொழிலானது சிலின்டர் பாவித்து கரையோரப் பகுதியில் தொழில் புரிவதால் பாரிய தொழில் இழப்பை எமது மீனவர்கள் எதிர்நோக்குகின்றார்கள்.
03.19.03.2013 கடற்றொழில் உதவிப் பணிப்பாளரின் கடிதம் மூலம் கரையோரம் தடைசெய்யப்பட்டு சிறிது காலம் ஓய்ந்திருந்த சிலின்டர் தொழில் மீண்டும் செய்யப்படுகின்றது.
ஆழ்கடலில் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட சிலின்டர் கொண்டு கடல் அட்டை, சங்கு குளித்தல் தொழிலை எமது கரையோரப் பகுதியில் தொழில் புரிவதை நிறுத்தி இத்தொழிலுக்கென குறித்தொதுக்கப்பட்ட பகுதியில் தொழில் புரிவதை உறுதிப்படுத்தல்.

அனர்த்தத்தின்போது பாதிக்கப்படும் மீனவர்களுக்கான இழப்பீடு

01.கடந்தகாலங்களில் இயற்கை அனர்த்தங்களின்போது எமது மீனவர்கள்  தங்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர்.
மேலும் கடல் சீற்றம் காலநிலை மாற்றம் என பல மாதங்கள் தொழில் இன்றி தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இவர்களின் பெயர்கள் தகவலாக திரட்டப்படுகின்றன.  ஆனால் கொடுப்பனவுகள் ஏதும் வழங்கப்படுவதில்லை.
எரிபொருள் மானிய முத்திரை நிறுத்தத்தின் தாக்கம்

16.02.2012 தொடக்கம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானியம் இவ்வருட இறுதிக்குள் நிறுத்தப்பட்டு  இவ் இழப்புக்கு பதிலாக வலைகள் வழங்கப்படவுள்ளதாக அறிகின்றோம்.

இது     மீனவர்களுக்கு எந்த வகையிலும் அவர்களது இழப்பை ஈடு செய்யக்கூடியதாக இல்லை. இன்றுவரை     இம்மீனவர்கள் தொழில் ரீதியில் உயர்வடையவும் இல்லை

இவ் உபகரணங்கள் வழங்கப்படுவதால்     அவர்களது வாழ்வாதாரமும் உயர்வடைவதாகவும் இல்லை.

இம் மீனவர்கள் இவ் உபகரணங்களுக்கு பதிலாக தொடர்ந்து எரிபொருள் மானியத்தை வழங்குமாறு அல்லது எரிபொருளுக்கு விலை குறைப்பு செய்யுமாறும் கோரி நிற்கின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்து வருவதால் இம் மீனவர்கள் கடன் சுமைக்கும் வறுமைக்கும் சிக்குண்டு தங்கள் தொழில்களை கைவிட்டு தங்களது உயிர்களை மாய்க்கவும் அல்லது நாட்டை விட்டு அயல் நாட்டுக்கு இடம்பெயர்ந்துசெல்லவும் வழிவகுக்கின்றது.

எனவே இவர்களின்  நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வினை வழங்குமாறு மன்னார் மாவட்ட மீனவச் சமூகம் சார்பாக கேட்டு நிற்கின்றோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X