2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வயல்நிலங்களிலுள்ள வெடிபொருட்களை அகற்ற நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி, கரியாவை நாகபடுவான் குளத்திற்கு கீழுள்ள 1,620 ஏக்கர் விவசாய நிலங்களில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.

இதன்போது, மேற்படி விவசாய நிலங்களில் வெடிபொருட்கள் காணப்படுவதால் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியவில்லையென்றும் வெடிபொருட்களை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்த போதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மாவட்ட விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், மழைக் காலம் தொடங்கினால் வெடிபொருட்கள் அகற்றுவது சிரமமானதாக மாறிவிடும் என்றும் வரட்சி நிலவுகின்ற காலப்பகுதியிலேயே வெடிபொருட்களை அகற்றியிருக்க வேண்டும் எனவும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த மாவட்ட செலயாளர், மேற்படி பகுதியில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படும் அடிக்கட்டை பசளையை, கமநல சேவை நிலையங்கள் ஊடாக விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 59 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அவற்றில் 50 சதவீத நிலங்களுக்கான காலபோக நெற்செய்கையை விவசாயிகள் தற்போது மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

எஞ்சிய விவசாயிகளும் நெற்செய்கையை விரையில் மேற்கொள்ளவிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கான அடிக்கட்டை பசளைகள் இன்னமும் வழங்கப்படாமல் இருக்கின்றது என விவசாய அமைப்புக்கள் குற்றஞ்சாட்டின.

இதற்கு பதிலளித்த மாவட்ட செயலாளர், “கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் தனியார்கள் ஆகியோரிடமிருந்து விதை நெல்லை பெற்று காலபோக நெற்செய்கையை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான விவசாய விரிவாக்கல் நடவடிக்கை மற்றும், நீhப்பாசன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நெற்செய்கைக்கு ஆரம்ப கட்டத்தில் இடும் அடிக்கட்டை பசளைகளை அந்தந்த கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .