2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வில்பத்துவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை

Kogilavani   / 2015 மே 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு மக்கள் தங்களது மூதாதையர்களை நல்லடக்கம் செய்ய நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த மையவாடி கடற்டபடையினரின் எல்லைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது' என நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹீனைஸ் பாறூக் தெரிவித்துள்ளார்.

வில்பத்து பகுதியில் சட்டவிரோதமாக முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்று அண்மைக்காலங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற இடப்பெயர்வுக்கு முன்னர் வசித்த குடும்பங்களும் தற்போது இருக்கின்ற குடும்பங்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வில்பத்து சரணாலயத்தின் எல்லையாக 'மோதரகம ஆறு' என்ற ஆறு விளங்குகின்றது.

இவர்களின் குடியேற்றங்கள் வில்பத்து சரணாலய பகுதிக்கு வெளியில் ஆற்றுக்கு அப்பாற்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது. மாறாக வில்பத்துவின் எல்லைக்குள் சட்டவிரோதமாக யாரும் மீள்குடியேற்றப்படவில்லை.
எனவே இங்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பது என்பது முறைப்படி வனப்பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் அத்திணைக்களத்திடம் இருந்து முறையாக  விடுவிக்கப்பட்டும், அரசுக்கு சொந்தமான காணிகள், அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் விடுவிக்கப்பட்டு  முசலி பிரதேச செயலாளரினூடாக மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழ்கின்ற மக்களுக்கு ½ ஏக்கர் காணி வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அது தனியே முஸ்ஸிம்களுக்கு மட்டுமல்ல. தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கும் காணிகள் இங்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதில் கடற்படையினரினாலும் இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கே அதிகளவான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுமர் 735 ஏக்கர் முள்ளிக்குளம் காணியும், சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட சிலாபத்துறை காணியும் அதே போன்று சிங்கள மக்களுக்கு சொந்தமான கஜுவத்தை காணியும் படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாகவே குறித்த இடங்களில் இம்மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக  மறிச்சுக்கட்டி மக்களுக்குச் சொந்தமான 'ஆனப்பாப்பான்'என்ற விவசாய நிலங்கள் முள்ளிக்குளம் கடற்படையினரால் சுவீகர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் மறிச்சுக்கட்டி மரைக்கார்தீவு மக்கள் இறந்தோரை நல்லடக்கம் செய்ய நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த மையவாடி கடற்டபடையினரின் எல்லைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடற்படைக்கு வெளியில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்கள் பரம்பரையாக வசித்த  இடங்களில் கூட படையினர் சிறுசிறு முகாம்களை அமைத்து இதுவரையும் அதனை மக்களிடம் விடுவிக்காமல் உள்ளனர்.

மேலும் மறிச்சுக்கட்டி, பாலக்குழி மற்றும் கரடிக்குழி ஆகிய கிராம மக்கள்  தங்களது ஜீவனோபாய தொழிலாக விவசாயத்தை முக்கியமாக மேற்கொள்கின்றனர்.

கத்தாங்கண்டல் என்ற விவசாய நிலத்தில் சிலருடைய காணிகளில் கடற்படையினர் இன்றும் விவசாயம் மேற்கொள்ளும் நிலை கவலையைத் தருகின்றது.

முசலியில் படையினரிடம் இருக்கும் மேற்படி மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்தேனர்.

அவர் அவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் மிகவிரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே இவ்விடயம் மனிதாபிமானத்துடன் நோக்கப்படவேண்டும். பிழையான தகவல்களை காட்டி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் பின்னடைவை ஏற்படுத்த நினைக்கும் சதிகாரர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .