2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“நீதி கிடைக்க வேண்டும்“ எம்.பி அடைக்கலநாதன்

R.Tharaniya   / 2025 மார்ச் 31 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு தடை விதித்துள்ளது. இதனை நாம் முதலில் வரவேற்கின்றோம். ஆனால் வினோதம் நடைபெறுகிறது. தென்னிலங்கையில் தற்போது உள்ளஅரசு சார்ந்தவர்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாக நின்று இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றார்கள்.

ஜேவிபி அரசாங்கம் ஆரம்பத்தில்  எமது இனப்பிரச்சினை தொடர்பில் ஐ.நா தீர்மானம் எடுக்கப்பட்ட உடனேயே அதை நடை முறைப்படுத்துவதற்கான ஆதரவை கொடுக்கவில்லை. இப்பொழுது நான்கு பேருக்கு தடை விதித்ததை  வைத்துக் கொண்டுஅமைச்சர் அனைவரும் கூக்குரல் போடுவது இனவாதத்தின் அடிப்படையில் இந்தஅரசாங்கம் செயற்படுவதை தெட்டத் தெளிவாக காட்டுக்கின்றது.

ஆகவே,எங்களைப் பொறுத்தவரை எப்படி சிங்கள தேசத்தில் ஒருவருக்கு  பிரச்சனை என்றால் ஆட்சியாளர்கள், கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு அதற்குஎதிராக குரல்கொடுக்கின்ற விடயத்தை நாம் வரலாற்று ரீதியாக பார்க்கின்ற விடயம்.தற்போதும் பார்க்கின்றோம். ஆனால் எங்களுக்குள்  ஒற்றுமையீனத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எங்களது போராட்டங்களும் ஒருமித்த போராட்டமாக நடைபெறுவதில்லை. ஆகவே தொடர்ந்து,  மனித உரிமை மீறல்கள் செய்தவர்களுக்கு ஐ.நா சபை கூட அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகின்ற நிலையில், தமிழ் மக்கள் அனைவரும் இதனைஆதரிக்க வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச நீதமன்றத்தின் மூலம் நீதி வருவதற்கு நாம் அதனை செயற்படுத்த வேண்டும்.  நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் தென்னிலங்கையில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருந்து எம்மை அழிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுப்பார்கள். புதிய அரசாங்கம் கூட போராட்ட இயக்கம் என்கின்ற நிலை மாறி ஒரு இனவாதஅரசாக பார்க்க கூடியநிலையில் உள்ளது.பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரைசெல்ல வேண்டும். அதன் மூலம் நீதி கிடைக்க வேண்டும்.

எங்களுக்குள் இருக்கும் பகைமைகளை மறந்து எங்களுக்காக மரித்த மக்கள்,போராளிகள் அனைவருக்காகவும், தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற பௌத்தமயமாக்கல், நிலஅபகரிப்பு தொடரும் அரசஅடக்கு முறைகளுக்கு எதிராக ஓரணியில் செயல்பட வேண்டும்.

புதிதாக வந்தஅரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருகின்ற போது அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறினார்கள். தற்போது அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக நாட்கள் செல்லும்  என கூறியுள்ளது. ஆகவே,அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் என்பதைஇந்தஅரசுஒத்துக் கொண்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பில் பேசுவதை கவனத்தில் கொள்ளவேண்டும். தேர்தல் காலங்களில் மாவட்டஅபிவிருத்திக்  குழுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. என்ன வேலைத்திட்டங்களை செய்யப் போகின்றோம் எனக் கூறுகிறார்கள்.
 
பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களை பெற எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோல் வடக்கு,கிழக்கில் பல சபைகளை கைப்பற்றும் நோக்கில் செயற்படுகிறார்கள் என தெரிகின்றது எனத்தெரிவித்தார்.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X