George / 2017 மார்ச் 24 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“களுத்துறை மாவட்டத்தில், மத்துகம கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்து இயங்கி வருகின்ற தமிழ்ப் பிரிவு மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று சுட்டிக்காட்டிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, “அங்கு இந்துசமயப் பாடத்துக்கு ஆசிரியர் இருந்த வரலாறே இல்லை” என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) நிலையியற் கட்டளையின் கீழ் கல்வியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்தப் பாடசாலையில், தமிழ்ப் பிரிவில் பல்வேறான குறைப்பாடுகள் நிலவுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு கல்வியமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்மொழிமூலமான மாணவர்கள் கல்வி கற்பதற்கும், ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதற்கும் உகந்த பௌதீக வள வசதிகளையும், சூழலையும் ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
அங்கு நிலவுகின்ற ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக அப்பகுதியைச் சார்ந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கும், மேற்படி தமிழ்ப் பிரிவு பாடசாலையின் நிர்வாகப் பணிகளை, தமிழ்ப் பிரிவுக்கான அதிபரின் கீழ் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
எமது நாட்டின் இலவசக் கல்வியின் தந்தையான சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவின் நாமத்தைக் கொண்டு இயங்கி வருகின்ற, கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்ததாக 6ஆம் தரம் முதல், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரையிலான தமிழ்ப் பிரிவொன்று இயங்கி வருகின்றது.
இது, ஆரம்பத்தில் மாலை நேரப் பாடசாலையாக இயங்கிவந்த நிலையில், 1998 ஆம் ஆண்டு முதல் காலை நேரப் பாடசாலையாக இயங்கி வருவதாகவும், மேற்படி தேசிய பாடசாலை அமைந்துள்ள வளவில் இந்தத் தமிழ்ப் பிரிவு பாடசாலை ஒரு மூலையில் ஒரு பழைய கட்டிடத்திலும், அதனருகேயுள்ள ஒரு தற்காலிகக் கட்டிடத்திலுமே இயங்கி வருகின்றது. அங்கு இட நெருக்கடி மிக்கதாகக் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தப் பாடசாலையின் வரலாற்றில் இந்துசமயப் பாடத்துக்கென ஓர் ஆசிரியர் பணியில் இருந்த வரலாறே கிடையாது. தற்போது விஞ்ஞானம், வரலாறு, தமிழ் மற்றும் இந்துசமயப் பாடங்களுக்கென ஆசிரியர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து, அப்பாடசாலையில் பயிலும் தமிழ் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் டக்ளஸ் எம்.பி கேட்டுக்கொண்டார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026