2024 மே 18, சனிக்கிழமை

யானை மோதலைக் குறைப்பதற்கு பெருஞ்செலவு

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

மனிதர் - யானை மோதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக 2015-2016 ஆண்டுகளில் மாத்திரம் 844 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது” என, வனஜீவராசிகள் திணைக்கள அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.  

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்றுக் காலை 10:30க்கு கூடிய நாடாளுன்ற அமர்வின்போது, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறினார்.  

அவர் தொடர்ந்து கூறுகையில், “2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கு அமைய, இலங்கையில் 5,879 யானைகள் இருந்ததுடன், அதன் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.  

மனிதர் - யானை மோதலால் மரணமடையும் நபர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்படும் வீட்டுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்குக் காப்புறுதித் திட்டமும், மரணமடையும் நபருக்கு சமூர்த்தி வழங்கும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.  

மேலும், காட்டு யானைகளின் தாக்குதலால் மரணமடைந்தவர் ஒருவருக்கு, 2015ஆம் ஆண்டுக்கு முன்னர், இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதனை நாங்கள் ஐந்து இலட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளோம்.  

அத்துடன், யானைத் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக முன்னர், ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நாங்கள் இரண்டு இலட்சம் ரூபாய் வழங்குகின்றோம்.  

சிறு பாதிப்புகளுக்கான இழப்பீட்டை 10ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை அதிகரித்துள்ளோம். மரணச் சடங்குகளுக்காக முன்னர் 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 30ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.   

யானை தாக்கி மரணமடையும் நபருக்கு சமூர்த்தி கொடுப்பணவு வழங்கப்படவில்லையாயின் அவரது குடும்பத்துக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்க எஸ்.பி. திஸாநாயக்கவின் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன், அழிவடையும் வயல் நிலங்களுக்கு காப்புறுதி திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.  

இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளோம். யானை மோதலால் வனஜீவராசி அதிகாரி ஒருவர் மரணமடையும்போது அவருக்கு இராணுவத்தினருக்கு வழங்கப்படும் கௌரவம் போன்று பதவி உயர்வும், விசேட கொடுப்பனவும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

2015-2016ஆம் ஆண்டுகளில் யானை - மனித மோதலைக் குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கா 844,552,450 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது” என்று மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .