2026 மார்ச் 07, சனிக்கிழமை

விஜய்சேதுபதி மீதான வழக்கு ரத்து..

Freelancer   / 2022 ஜூலை 29 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி இரவு பெங்களூர் விமான நிலையம் சென்றார். அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும், தனது மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9ஆவது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார்.

விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி சத்தி குமார் சுகுமார குரூப், மகாகாந்தியை தாக்கியதாக விஜய் சேதுபதி மீதான பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்குக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .