2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ஆக்‌ஷன் அவதாரத்தில் விஜயகாந்த் கலக்கிய ’கேப்டன் பிரபாகரன்’ ரீ-ரிலீஸ்

Editorial   / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 1991-ல் கேப்டன் பிரபாகரன் 120 திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது 500 திரையரங்குகளில் 4K தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது

நடிகர் விஜயகாந்தை இன்றளவும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கேப்டன் என்று அழைப்பதற்கு மிகவும் முக்கிய காரணம் 1991-ல் வெளியான ’கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ஆகும்.

அந்த வகையில் இன்றைய தலைமுறையினர் கொண்டாடும் வகையில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது கேப்டன் பிரபாகரன் திரைப்படம். அதிநவீன தொழில்நுட்பத்தில் புத்தம் புது திரைப்படத்திற்கு இணையாக புதுப்பிக்கப்பட்டு, 4K தரத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு நூறாவது படம் என்பது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஆனால் உச்ச நடிகர்களுக்கு அவர்களது 100-வது படம் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்த வரலாறு உள்ளது. ரஜினிகாந்தின் நூறாவது திரைப்படமானது ராகவேந்திரா (1985) விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் கமர்ஷியல் ஹீரோவாக ரஜினிக்கு வசூல் ரீதியாக சறுக்கலை சந்தித்தது.

அடுத்ததாக கமல்ஹாசனின் நூறாவது படம் ராஜபார்வை (1981). இப்படத்தில் கண் பார்வையற்றவராக கமல்ஹாசனின் நடிப்பு பெருமளவு பாராட்டைப் பெற்றாலும், வசூல்ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இச்சூழலில் விஜயகாந்தின் 99-வது படமானது ’இரவு சூரியன்’ படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

விஜயகாந்த் நூறாவது படத்தை யார் இயக்கப் போகிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், திரைப்பட கல்லூரி மாணவராக இருந்து அவரது புலன் விசாரணை படத்தை இயக்கிய செல்வமணி தான் விஜயகாந்தின் 100-வது படத்தை இயக்குகிறார் என தகவல் வெளியானது. இதற்கு விஜயகாந்தின் நலம் விரும்பிகள் 100-வது பட வாய்ப்பை வேறு யாராவது பிரபல இயக்குநரிடம் வழங்கலாமே என கருத்து தெரிவித்தனர்.

அதற்கு விஜயகாந்த், எனக்கு கேப்டன் பிரபாகரன் கதையின் மீதும், இயக்குநர் செல்வமணி மீதும் நம்பிக்கை உள்ளது எனவும், படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என கூறினார். அவரது நம்பிக்கைக்கு ஏற்ப கேப்டன் பிரபாகரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி விஜயகாந்த் திரைவாழ்வில் தலைசிறந்த 10 படங்களில் கேப்டன் பிரபாகரன் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

கேப்டன் பிரபாகரன் கதை அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை கற்பனை கதாபாத்திரம் மூலம் வில்லனாக சித்தரித்தும், அவரை வனத்துறை அதிகாரியாக விஜயகாந்த் பிடிப்பது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் மன்சூர் அலிகான் முதன் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்பு பெரும்பாலும் கேரளாவில் உள்ள சாலக்குடி மற்றும் அதிரப்பள்ளி அருவி பகுதிகளில் மொத்தமாக 60 நாட்கள் நடைபெற்றுள்ளது.

அதில் விஜயகாந்த் ரயில் மற்றும் உயரிய பாறைகள் மீது அவர் போடக் கூடிய சண்டைக் காட்சிகள் அனைத்திலும் அவரே டூப் ஏதுமின்றி நடித்துக் கொடுத்தாராம். இந்த காட்சிகள் மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் படமாக்கப்பட்டது.

இசைஞானி இளையராஜா இசையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, ’பாசமுள்ள பாண்டியரே’ என இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு இளையராஜா முதலில் வேறொரு மெட்டினை அமைத்துக் கொடுத்திருந்தாராம்.

அதனைக் கேட்ட இயக்குநர் செல்வமணிக்கு உடனடியாக இளையராஜாவிடம் இந்தியில் வெளி வந்த சோலே படத்தில் இடம்பெற்ற ‘மெகபூபா’ பாடல் போல வேண்டும் என தெரிவித்தாராம். உடனடியாக இளையராஜா செல்வமணியின் ரசனைக்கேற்ப ஆட்டமா, தேரோட்டமா என்கிற பாடலை இசையமைத்து கொடுத்தாராம். ஆட்டமா தேரோட்டமா பாடல் தேனியில் இருந்து சரியாக 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பக்கரை அருவியில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படம் வெளியானதற்கு பிறகு அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பலர் படையெடுத்தனர்.

அதே போல இப்படத்தில் பிரபலமான வசனமான "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" படத்தில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் விஜயகாந்தின் அடையாளமாக மாறியது.

இந்த நிலையில், மீண்டும் ’கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் 500 திரையரங்கங்களுக்கு மேல் வெளியாக உள்ளது. இதன் உரிமையை ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. கடந்த 1991-ல் கேப்டன் பிரபாகரன் 120 திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது 500 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. விஜயகாந்த் மறைந்தாலும் மக்கள் மனதில் ஆதர்ச நாயகனாக என்றும் நிலைத்திருப்பார் என்பதே உண்மை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X