Editorial / 2026 மே 07 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple), தனது ஐபோன் வாடிக்கையாளர்களுக்குச் சுமார் 95 டொலர் வரை இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
வழக்கின் பின்னணி:
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 வரிசை (Series) திறன்பேசிகளை விற்பனை செய்தபோது, ‘ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்’ (Apple Intelligence) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை வழங்குவதாகக் கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக அந்நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர, 250 மில்லியன் டொலர் தொகையைச் செலுத்த ஆப்பிள் நிறுவனம் தற்போது சம்மதித்துள்ளது.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த ‘கிளாஸ் ஆக்ஷன்’ (Class Action) வழக்கு, தற்போது நீதிமன்றத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ஆப்பிள் முன்வைத்துள்ள இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால், பாதிக்கப்பட்ட ஐபோன் 15 மற்றும் 16 பயனாளர்களுக்குத் தலா 8,000 ரூபாய் (இலங்கை மதிப்பில் சுமார் 28,000 ரூபாய்க்கும் மேல்) வரை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
எதற்காக இந்த வழக்கு?
ஆப்பிள் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட ‘சிரி’ (Siri) அசிஸ்டென்ட் மற்றும் ‘ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்’ அம்சங்களை முழுமையாக உருவாக்காமலேயே, அவை புதிய ஐபோன்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தியது. இத்தகைய கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 மாடல்களின் விற்பனையை அதிகரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வாக்குறுதி அளித்தபடி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை உரிய நேரத்தில் வழங்காத காரணத்தாலேயே, அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.
யாருக்கு இழப்பீடு கிடைக்கும்?
அமெரிக்காவில் 2024 ஜூன் முதல் 2025 மார்ச் வரை ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு, வாக்குறுதி அளித்த சேவைகளை வழங்காததற்காக இந்த நஷ்டஈட்டை வழங்கத் தயார் என ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .