2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கரடி பொம்மையுடன் முன்னாள் உறுப்பினர் கைது (வீடியோ)

Mayu   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுப் பொருட்களுக்குள் சூட்சுமமாக மறைத்து, கொரியர் சேவை ஊடாகக் கடத்தி வரப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருளுடன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (08) மாலை இந்த அதிரடிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (D.C.D.B) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேக நபர் நடமாடிய பல வீடுகளில் பொலிஸார் மணிக்கணக்கில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது, வெளிநாட்டிலிருந்து கொரியர் மூலம் வந்த விளையாட்டுப் பொதிகளில் இருந்த 'கரடி பொம்மையின்' (Teddy Bear) கழுத்துப் பகுதியில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 'தோடம்பழம் சுயேட்சைக் குழு' சார்பில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராகப் பணியாற்றிய 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து போதைப்பொருளுடன் சேர்த்து, மின்னணு தராசு, 2 கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டாரவின் வழிநடத்தலில், ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இந்தச் சாதனையைச் புரிந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (09) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .