2026 மே 11, திங்கட்கிழமை

விவசாயிகளுக்கு இனி கவலையில்லை (வீடியோ )

Lenin Raj   / 2026 மே 11 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாரி மஹிம - எமது மரபு தேசியத் திட்டத்தின் கீழ், வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த உலக மரபுச் சின்னமான அலஹெர அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் நேற்று (10) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், அமைச்சர்களான ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் டி.பி. சரத் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அணைக்கட்டின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் 309,144,000.00 ரூபா (சுமார் 30.9 கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நீர்ப்பாசனக் கட்டமைப்பை அதன் பழமை மாறாமல் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கே.டி. லால் காந்த, விவசாயத் துறை சார்ந்த பல முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்தினார்:

 சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான முழு அளவு உரமும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறையினர் ஊடாக விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.

புதிய காணிகளைத் தேடுவதை விட, இருக்கும் காணிகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார்.

அறுவடைக் காலத்தில் ஏற்படும் விலை வீழ்ச்சியைத் தடுக்க, அரசாங்கம் பொதுவான களஞ்சியசாலைகளை நிர்மாணிக்கும். விவசாயிகள் தமது நெல்லை உலரவைத்து அங்கு பாதுகாப்பாகச் சேமிக்க முடியும்.

நெற்பயிரச்செய்கையை மட்டும் நம்பியிருக்காமல், குறைந்தபட்சம் 5 பசுக்களைக் கொண்ட பால் பண்ணைகளை அமைத்து மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்துப் பேசிய அமைச்சர், "ஆட்சி மாற்றத்தின் பின், அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அடிமட்ட மக்களிடம் பணம் புழங்கும்போதுதான் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும்." இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிகாரம் மேல்தட்டு வர்க்கத்திடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு மாறியுள்ளதாகவும், வசதி படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே தற்போதைய அரசின் 'பொருளாதார ஜனநாயக' இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .