2025 மே 03, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு 'நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 10 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தி அடையும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயகோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளரை ஜனாதிபதிச் செயலகத்தில் திங்கட்கிழமை (09) அம்பாறை மாவட்டச் சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், செயலாளர் ஏ.வஹாப் உள்ளிட்ட பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேற்படி சங்கத் தலைவர் எம்.பௌசர் தெரிவித்தபோது,'  கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர். சுமார் 20 வருடங்களாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்பில்  கடந்த காலத்தில்; இழுத்தடிக்கப்பட்ட போதும், நல்லாட்சி அரசாங்கமானது இது விடயத்தில் கரிசனை செலுத்தியுள்ளது.

இந்நிலையில், தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். இதன்போது, சம்மந்தப்பட்டவர்களுடன் தொலைபேசியில்  அவர் தொடர்பு கொண்டு மேற்படி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். இந்நிலையில், மேற்படி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தி அடையும் எனக் கூறினார்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X