2025 ஜூன் 09, திங்கட்கிழமை

காட்டு யானைகளால் தொடரும் தொல்லை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல். மப்றூக்)

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேசத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் அடிக்கடி புகுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கும் அப்பிரதேச மக்கள், இது தொடர்பில் வனவிலங்குத் திணைக்களத்தினரும், அரசாங்க அதிகாரிகளும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து தமக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்னரும், மாவடிப்பள்ளியிலுள்ள வீடொன்றின் மதிலை உடைத்துக் கொண்டு குடியிருப்பு வளவுக்குள் நுளைந்த யானை, அங்குள்ள பயிர்களையும் சேதமாக்கி விட்டுச் சென்றுள்ளது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில்,

‘’இரவில் நாம் உறங்கிய வேளையில் யானை எமது மதிலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்திருந்தது. பின்னர் வளவில் இருந்த பயிர்களையும் சேதமாக்கியது. சத்தம் கேட்டு நாம் விழித்துப் பார்த்த போதுதான் யானையைக் கண்டோம். அதிஷ்டவசமாக, அந்த யானை வீட்டைச் சேதப்படுத்தவில்லை. நாம் அச்சம் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிவிட்டோம்.

யானைகளின் தொல்லை இப்போது இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து விட்டது. இது குறித்து வனவிலங்குத் திணைக்களத்தினரும், அரசாங்கமுமே நடவடிக்கைகளை மேற்கொண்டு எம்மைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.

இதேவேளை, அம்பாறை மற்றும் சம்மாந்துறை வனவிலங்குத் திணைக்கள உத்தியோகத்தர்கள்
இரவு வேளையில் மாவடிப்பள்ளி வயற்பிரதேசத்தில் நின்றிருந்த யானைகள் சிலவற்றை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, வனவிலங்கு திணைக்களத்தின் அம்பாறைக் காரியாலய அதிகாரியொருவர் கூறுகையில்,

‘’யானைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் போது, அவர்கள் வனவிலங்கு உத்தியோகத்தர்களைத்ததான் முதலில் குற்றம் கூறுகிறார்கள். ஆனால், நாம் இயன்றவரை யானைகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள வனவிலங்குத் திணைக்கள அலுவலகங்களுக்கு தலைமை அலுவலகமாக அம்பாறை அலுவலகமே திகழ்கிறது. ஆனால், இங்கு கடுமையான ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. அந்த நிலையிலும், நாம் பொதுமக்களுக்கான சேவைகளை முன்னின்று வழங்கிக் கொண்டுதான் வருகின்றோம்’’ என்றார்.

அம்பாறை மாவட்டக் காடுகளில் சுமார் 350 யானைகள் உள்ளதாக, குறித்த வனவிலங்குத் திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.                                                                                                                                                                                                                                                    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .