Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 ஜூலை 10 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
"சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்களுக்கென அம்பாறை, நுரைச்சோலையில் கட்டப்பட்ட வீடுகளை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களிடம் ஒப்படைப்பதற்கான நேர்மைமிகு தீர்மானமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் போது இந்நாட்டில் பௌத்த தர்மமும், மனித தர்மமும் இன்னும் உயிர் வாழ்கின்ற தென்ற உண்மையை உலகறியச் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் நமது நாட்டைப்பற்றி சமகாலத்தில் சர்வதேச சமூகம் கொண்டிருக்கின்ற எண்ணத்திலும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும்".
இவ்வாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமாதான பேரவை மற்றும் கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனம் போன்றவற்றின் முன்னாள் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் வீடிழந்தவர்களுக்கென கட்டப்பட்ட நுரைச்சோலை வீடுகளை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியியை வலிறுத்தக் கோரி, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தத்தில் மேலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நம் சமூகம் சார்ந்த மிகமிக முக்கியமான ஒரு விடயம் தொடர்பாகத் தங்களுக்கு இக்கடிதத்தை வரைய வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மனம் நிறைவடைவதோடு இறைவனுக்கு நன்றியும் கூறுகின்றேன்.
2004 டிசம்பர் மாதம் நமது நாட்டைச் கதிகலக்கி பல்வேறு அனர்த்தங்களை ஏற்படுத்திய சுனாமிப் பேரலையால் வீடுவாசல் சொத்துக்களோடு வாழ்வையும் இழந்து நிற்கதியாக வெயிலிலும் மழையிலும் துன்புற்றுக் கொண்டிருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சுனாமியால் பாதிக்கப்பட்ட அகதிகள் கடந்த 26.06.2011 ஆம் திகதி என்னிடம் முன்வைத்த பரிதாபகரமான கோரிக்கையை அவர்கள் சார்பாக உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட வீடுகளுக்கான சாவிகள் ஜனாதிபதியிடம் அவர்களிடம் சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்ட விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்ததாகவும் இன்னும் ஏன் இவை உண்மையாக சுனாமியால் பாதிக்கப்பட்ட எமக்கு வழங்கப்படாமல் இருக்கின்றன என்பதை அறிந்து தகவல் தரும்படியும் என்னை வேண்டிக் கொண்டதற்கிணங்கவே இதனை ஜனாதிபதியுடன் மிக நெருங்கிய தொடர்புபட்டவர்கள் எனக் கருதி தங்களுக்கு இக்கடிதத்தை வரைகின்றேன்.
சுனாமி அனர்த்தத்தின் போது நமது தாய் நாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர். சிறுவர், முதியோர், ஆண், பெண் தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் இவ்வனர்த்தத்தால் பாதிப்புக்கள் ஏற்பட்டன. நாடு துயரத்தின் உச்சத்தையே அடைந்திருந்தது.
சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கிழக்கு மாகாணக் கரையோரப் பிரதேசங்கள் முதன்மைப்படுத்தப்படக் கூடியவை என்பது உலகமே ஒத்துக் கொள்ளக்கூடிய உண்மை.
சுனாமியின் போது உறவுகளையும், சொத்து சுகங்களையும், வீடு வாசல்களையும், நிலபுலன்களையும் இழந்து சோகத்தில் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த இம்மாகணத்தின் கரையோரக் குடியிருப்பாளர்களான தமிழ் முஸ்லிம் சுனாமி அகதிகளுக்கு ஏனைய மாவட்டங்களிலிருந்து பல்வேறுபட்ட அவசிய உதவிகள் வந்து கொண்டிருந்தன.
குறிப்பாக தென் பகுதி பௌத்த விகாராதிபதிகளின் தலைமையில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் அதிகமான பொருட்கள் கொண்டுவரப்பட்டு இப்பிரதேசத்தில் வினியோகிக்கப்பட்ட நிகழ்வுகள் பசு மரத்திணி போல இன்னும் நெஞ்சங்களில் பதிந்திருக்கின்றன. இதன்போது பௌத்த தர்மத்தின் காருண்யத்தைக் கண்கூடாகக் காணமுடிந்தது. இப்பாரிய கைங்கரியத்தை மேற்கொண்ட பௌத்த துறவிகளின் பரோபகாரச் சிந்தனையும் காருண்ய குணத்தையும் இப்பிரதேச மக்கள் இன்றுவரையிலும் நினைவு கூர்ந்த வண்ணமே இருக்கின்றனர்.
இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வீடுகளை இழந்த தமிழர்களின் எண்ணிக்கை 1984 ஆகும். இவர்களுக்காக இதுவரையில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2784 ஆகும். இம்மாவட்டத்தில் சுனாமியால் வீடிழந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 10 அல்லது 12க்கும் குறைவானதாகும். இவர்களுக்காகக் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 102 ஆகும். இவர்களுக்கு சுமார் 10 மடங்கு அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை விடவும் பாதிக்கப்படாதவர்களே அதிகம் குடியிருந்து கொண்டிருக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் முஸ்லிம் மக்களே சுனாமியால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுள் வீடிழந்தவர்களின் எண்ணிக்கை 2784 ஆகும். இதுவரையில் இவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2278 ஆகும். இதனடிப்படையில் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்களில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் தேவையான தொகைக்கும் அதிகமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிக்கப்பட்ட அளவுக்கேனும் இதுவரையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வில்லை. தற்போது நமது ஜனாதிபதி அவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் சாவிகளுக்குரிய வீடுகள் ஐநூறும் திட்டமிட்டபடி உறைவிடமின்றி அலையும் இந்த அகதிகளுக்கு தங்குதடையின்றி வழங்கப்படுமாக இருந்தால் மட்டுமே சுனாமி அகதிகளின் வீடில்லாப் பிரச்சினையை ஜனாதிபதி அவர்கள் தீர்த்து வைத்ததாக அமையும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென சவூதி அரேபியா நம்பிக்கை நிதியத்தின் உதவியுடன் அக்கரைப்பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட நுரைச்சோலையில் சவூதி மன்னர் அப்துல்லாவின் பெயர்தாங்கி அமைக்கப்பட்டுள்ள 500 வீடுகளும் கடந்த ஆறு வருடங்களாக மழையிலும், வெயிலிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் அல்லலுற்றுவரும் அகதிகளுக்கு கூடியகதியில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என இந்த அகதிகளின் சார்பாய் தங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன். இது தொடர்பாக நமது ஜனாதிபதியிடம் அணுகி, பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உச்சபட்ச நீதி வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கும் உண்டென்பதை இறைவனைச் சாட்சி வைத்து உங்களிடம் முன்வைக்கின்றேன்.
நமது ஜனாதிபதி சிறுபான்மை மக்களை மனித நேயத்துடன் நடாத்துபவர், சிறுபான்மையினரின் தாய்மொழியான தமிழை ஐ.நா சபையில் ஒலிக்கச் செய்து தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர். ஐவேளைத் தொழுகைக்குரிய அதானை வானொலியில் ஒலிபரப்புவதற்கு அனுமதி வழங்கியவர், மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் நெருங்கிய நண்பர், நாட்டின் நீதியரசர்களையே நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். இத்தியாதி சிறப்புக்களைக் கொண்ட நமது ஜனாதிபதியின் ஆட்சியில் பௌத்த தர்மமோ, மானிட தர்மமோ தோல்வி காண முடியாது.
வன்னியில் பிரபாகரன் பயங்கரவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு இரவோடிரவாக வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய அந்தக் கொடூரத்தை நினைத்து தமிழ் மக்கள் இன்றும் வெட்கித்துத் தலைகுனிந்து வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நுரைச்சோலையில் அம்பாரை மாவட்டக் கரையோர கிராமங்களில் சுனாமியால் வீடிழந்த முஸ்லிம்கள் 500 பேருக்கான வீடுகள் வழங்கப்படுவதன் மூலம் மாவட்டத்தின் இன விகிதாசாத்தில் எந்தவித தளம்பலும் ஏற்படப்போவதில்லை என்பதையும் இத்திட்டத்தின் மூலம் அக்கரைப்பற்று நுரைச்சோலையிலிருந்து 14 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தீகவாபி எனும் புனித பூமிக்கு எந்தவித மாசும் ஏற்படப்போவதுமில்லை என்பதையும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உங்களுக்கிருக்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்களுக்கென கட்டப்பட்ட இவ்வீடுகளை அவர்தம் கரங்களிலேயே ஒப்படைக்கின்ற நேர்மைமிகு தீர்மானமொன்றை நமது ஜனாதிபதி இறுதித் தீர்ப்பாக எடுக்கும் போது இந்நாட்டில் பௌத்த தர்மமும், மனித தர்மமும் இன்னும் உயிர் வாழ்கின்ற தென்ற உண்மையை உலகறியச் செய்ய முடியும். மட்டுமல்லாமல் நமது நாட்டைப்பற்றி சமகாலத்தில் சர்வதேச சமூகம் கொண்டிருக்கின்ற எண்ணத்திலும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும்.
அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக இந்த 500 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கிய சவூதி அரேபிய நம்பிக்கை நிதியம், இதற்கு முன் ஹமாந்தோட்டை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 வீடுகளும், காலி மாவட்டத்தில் 100 வீடுகளும், திருகோணமலை மாவட்டத்தோருக்கு 200 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தோருக்கு 200 வீடுகளும் நிர்மாணித்துக் கொடுத்திருப்பது ஜனாதிபதியின் மேலான கவனத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டிய ஓர் முக்கிய விடயமாகும்.
உண்மையில் நுரைச்சோலை வீடமைப்புக்கான காணி இலங்கைச் சீனிக் கூட்டுத் தாபனத்துக்குரியதாகும். சீனிக்கூட்டுத் தாபனத்தின் உத்தியோக பூர்வ அனுமதி பெறப்பட்டு, காணி ஆணையாளரின் சட்ட ரீதியான சம்மதத்துடன் ஜனாதிபதி அவர்களின் அனுமதியுடனேயே இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஜனாதிபதியின் மேலான கவனத்துக்குக் கொண்டுவரும்படி உங்களை தயவாய் கேட்டுக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களால் இவ்வீடுகள் சுனாமியால் வீடிழந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் அந்நன்னானை எதிர்பார்த்து விடை பெறுகின்றேன்.
Pasha Monday, 11 July 2011 02:48 PM
அதவுல்லா சார் ஓவர் டு யு.
Reply : 0 0
Rasmi Tuesday, 12 July 2011 01:30 AM
அப்படி என்டா யாரு ?
Reply : 0 0
nanpan Tuesday, 12 July 2011 05:52 AM
முதல்ல வாழ்த்துக்கள் ஹனீபா மதனிக்கு. இது முற்று முழுதாக முஸ்லீம் மக்களுக்கு சவூதி அரசு கொடுத்த பணத்தால் கட்டப்பட்ட 500 வீடுகளும் அநியாய தலையீட்டால் யாருக்கும் கொடுக்காமல் காடு பிடித்து நாசமாகி கிடக்கு. இருந்தாலும் சுய நலத்தை மறந்து பொது நலம் கொண்டு இவ்வீடுகளை 100 வீதம் ஏழை மக்களுக்கு கொடுக்க ஆவனை செய்யவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
3 hours ago