2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனை மக்கள் தமது சமூகத்தின் விடிவுக்காக வாக்குகளை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் றிசாத்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

300 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பக்கம் இருக்கும் போது, கல்முனை மாநகர ஆட்சியினை மாற்று கட்சிக்கு வழங்கி எதனை எமது மக்கள் அடையப் போகின்றார்கள் என கேள்வியெழுப்பிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், கல்முனை மாநகர மக்கள் தமது வாக்குகளை சமூகத்தின் விடிவுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வெற்றிலை சின்னத்தின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இரவு மருதமுனை, மற்றும் நற்பிட்டி முனைகளில் இடம்பெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு உரையாற்றும் போது,

"இந்த நாட்டில் 30 வருடமாக காணப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை மீட்டுத் தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதனது பிரதி பலன்தான் நாம் இன்றும் அச்சமற்ற சூழலில் இங்கு பேசிக் கொண்டிருக்கின்றோம். அந்த யுத்த காலத்தில் எம்மால் இப்படிவர முடியுமா என்று கேட்க விரும்புகின்றேன். எமது நாட்டில் பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய கட்சிகள் கூட சுதந்திரமாக தமது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதானது எமது அரசாங்கத்தின் ஜனநாயக ரீதியலான செயற்பாட்டுக்கு சான்றாகும்.

இப்படிப்பட்டதொரு சூழலில் நாம் மீண்டும் மக்கள் மீது பாசமில்லாத, அக்கறையில்லாத, சிந்தித்து கூட முடிவெடுக்கத் தெரியாத கட்சிகளின் தலைமைகளுக்கு பின்னால் சென்று எமது சமூகத்தை காட்டிக் கொடுக்கும் பணியை எவ்வாறு செய்ய முடியும்? தமது அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி அமைச்சுப் பதவிகளுக்குமாக அரசாங்கத்துடன் இணைந்தவர்கள், கல்முனை முஸ்லிம் சமூகத்தை ஜனாதிபதிக்கும்,  அரசாங்கத்துக்கும் எதிரானவர்கள் என்பதை காண்பித்து கிடைக்கும் அபிவிருத்திகளுக்கு தடைகளையேற்படுத்தும் பணியினை செய்வதற்கு எமது மக்கள் அனுமதியளிக்க கூடாது.

அழிந்து போன, அபிவிருத்தியின்றி காணப்படும் எமது மண்ணை மீள்கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. உரிமைகளுக்காக வாக்களியுங்கள் என்று கோஷம் முழங்கி மக்களை ஏமாற்றிய காலம் இனி மேல் வராது, அதனை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். மக்களின் தெளிவான சிந்தனையும், ஜனாதிபதியின் செயற்பாடுகளின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கை இன்று எமது அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்துள்ளது.

மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட அந்த கட்சி இன்று இல்லை. அவரது கொள்கைகளும், மக்கள் சார் செயற்பாடுகளும் இல்லை. தனது அரசியல் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக செயற்படும். தனிமனித லாபம் தேடும் தலைமைத்துவமே அந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் காணப்படுகின்றது. இக்கட்சியினது பின்னால், எமது சமூகம் செல்லுமெனில் அது எமது மக்களின் மீட்சிக்கு வழிவகுக்காது. அழிவுக்கே பாதையமைக்கும் என்பதை எமது கல்முனை மாநகர மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க அப்பாவி தமிழ், முஸ்லிம் மக்களை அரச எதிரியாக காட்டி சர்வதேசத்துக்கு தகவல் சொல்லும் கட்சியின் கூட்டில், புத்திசாதுரியமான மக்கள் ஒரு போதும் இணைய மாட்டார்கள்.  எமது மக்களின் உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நாமும், எமது பிரதேசமும் அபிவிருத்தியடைய வேண்டும்,  எமது அடிப்படை தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதனை அடைவதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டியது யதார்த்தமாகும். அதைவிடுத்து அழிவையும், முஸ்லிம் சமூகத்தினையும் அகதிகளாக கொண்டுவருவதற்கு பங்களிப்பு செய்த, தேசிய கூட்டமைப்பு சக்திகளுக்கு பின்னால் ஒரு போதும் செல்ல முடியாது"  கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது மக்கள் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அளிக்கும் வாக்குகளானது இலங்கை முஸ்லிம்களின் புதிய அத்தியாயத்துக்கான அடித்தளமாகும்" என்றும் கூறினார்.

இந்த கூட்டங்களில்,அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர, கிழக்கு மாக்காண அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், நவரட்ண ராஜா, கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல.எஸ்.ஹமீட், ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.நௌசாத் உட்பட பலரும் உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0

  • Nafeel Thursday, 06 October 2011 05:02 AM

    இலங்கையில் முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ கல்முனையில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அமைச்சர்களானால் சலுகைகள் உண்டு. உரிமைகள் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் தலைமைத்துவத்துடன் புதுப்பிக்கப்படவேன்டும்.

    Reply : 0       0

    siraj Thursday, 06 October 2011 05:15 AM

    அமைச்சர் எங்காவது ஒரு இளிச்ச வாயன் கிடைப்பானா? என்று தேடிக்கொண்டு இருக்கிறார். இவர்கள் எவ்வளவு வாய் கிழிய கத்தினாலும் ஒரு ஆசனமும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதுதான் சரியான முடிவு பாருங்கள்.

    Reply : 0       0

    siraj Sunday, 09 October 2011 08:18 AM

    கோவிந்தா கோவிந்தா அமைச்சர் றிசாத்துக்கு கோவிந்தா இப்ப காங்கிரஸ் அமோக வெற்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .