2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பில் முதலமைச்சர் இணக்கம்

Kogilavani   / 2012 ஜூன் 19 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளும் கொண்ட மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் ஏற்பாட்டில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருடனான சந்திப்பின் போதே முதலமைச்சர் இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீட், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மாஹிர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவர் நஸீர் அஹமட், பொருளாளர் ஏ.எல்.அன்வர்தீன் வைத்தியர்களான ஜாபிர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது வைத்தியசாலையில் நிலவிவரும் குறைபாடுகள் தொடர்பாகவும் அவசரத் தேவைகள் தொடர்பாகவும் முதலமைச்சருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன. அத்துடன் இம் மாவட்ட வைத்தியசாலையினை மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்திதர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அதற்கான நடவடிக்கையினை உடனடியாக எடுப்பதாக உறுதியளித்தார்.

இதேவேளை, இவ் வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவை இப்பிராந்திய மக்களுக்கு பயன்மிக்கதாக மாற்றியமைக்கு மகப்பேற்று நிபுணர் ஒருவரையும் மேலதிக வைத்தியர்களையும் நியமித்து உதவுமாறும் அத்துடன் வைத்தியசாலையில் நிலவும் சிற்றூழியர்கள் உட்பட ஆளணிப்பற்றாக் குறையினையும் நிவர்த்தி செய்து தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிவுற்ற இவ் வைத்தியசாலை பின்லாந்து நாட்டின் நிறுவனமொன்றின் நானூறு மில்லியன் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வைத்தியர்களின் குறைபாட்டால் பெறுமதிவாய்ந்த கருவிகள் கூட பயன்படுத்தப்படாமல் உள்ளதாக அபிவிருத்திக் குழுவினர் கவலையுடன் எடுத்துக் கூறினர்.

இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், தன்னுடைய பதவிக்காலத்தில் முடியுமான உதவிகளை இவ் வைத்தியசாலைக்கு செய்து தருவதுடன் சகல வசதிகளும் கொண்ட மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் எடுத்துவரும் முயற்சி பாராட்டத்தக்கதாகும் எனவும் முதலமைச்சர் இதன்போது தொரிவித்தார். அத்துடன் இவ் வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பான மகஜர் ஒன்றையும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால்காசீம் முதலமைச்சரிடம் கையளித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .